நோர்வே தமிழ்ச் சங்கத்தின் மோசடி அறிக்கைக்கு அமரதாஸ் அவர்களின் மறுப்பு அறிக்கை

நோர்வே தமிழ்ச் சங்கத்தின் மோசடி அறிக்கைக்கு அமரதாஸ் அவர்களின் மறுப்பு அறிக்கை
 

THROUGH THE GREY ZONES – PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA’S WAR ZONES என்னும் எனது புதிய ஒளிப்பட நூலை முன்வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பில், கண்ணியமற்றதும் மோசடியானதுமான அறிக்கையொன்றினை 2019-11-07 அன்று நோர்வே தமிழ்ச் சங்கம் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையிலே பல ‘கோளாறுகள்’ காணப்படுவதுடன், உண்மைக்குப் புறம்பான விடயங்கள் உள்ளன. அந்த அறிக்கை கண்டனத்திற்குரியதாகும். அதற்கான மறுப்பு அறிக்கையினை வெளியிட வேண்டிய தேவை எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அந்த அறிக்கை வெளியாகிய மறுநாள், உத்தியோகபூர்வமான மின்னஞ்சல் ஒன்றினை நோர்வே தமிழ்ச் சங்கத்திற்கு அனுப்பியிருந்தேன்.

நோர்வே தமிழ்ச் சங்கத்திற்கு 2019-11-08 அன்று நான் அனுப்பிய மின்னஞ்சலின் பிரதி, கீழே இணைக்கப்பட்டுள்ளது.

// Norway Tamil Sangam
Fjellstuveien 26,
0982 Oslo
Norway

நோர்வே தமிழ்ச் சங்கம், 2019-11-07 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து…

எனது THROUGH THE GREY ZONES என்னும் ஒளிப்பட நூல் தொடர்பான சர்ச்சை குறித்து, நோர்வே தமிழ்ச் சங்கம் நேற்று (2019-11-07) ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. சர்ச்சையைத் தீர்க்க முயலும் எத்தனம் வரவேற்கத்தக்கது. ஆனால், வழிமுறைகள் எதுவும் அறிவுபூர்வமானதாகவோ அறம் சார்ந்ததாகவோ இல்லை. அந்த அறிக்கையிலே பல கோளாறுகளும் ‘பூசிமெழுகும்’ தன்மையும் காணப்படுகின்றன. உண்மைக்குப் புறம்பான விடயங்கள் உள்ளன. அவை குறித்த விரிவான விளக்கங்களை உள்ளடக்கிய மறுப்பறிக்கையினை ஆதாரங்களுடன் விரைவில் வெளியிடுவேன். இப்போது நான் இங்கிலாந்தில் இருப்பதால் அதை உடனடியாகச் செய்ய முடியவில்லை. எனது இருப்பிடத்திற்குச் சென்றபின்னர், விரைவில் எனது மறுப்பறிக்கை வெளியாகும். இதுவரை, என்னால் நோர்வே தமிழ்ச் சங்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட மின்னஞ்சல்களுக்குப் பதில்கள் அனுப்பப்படவில்லை என்பதைப் பதிவுசெய்கிறேன். நோர்வே தமிழ்ச் சங்கம் தொடர்ந்தும் தவறிழைக்கிறது. அது தன்னைச் சீரமைத்துக்கொள்ள வேண்டிய காலகட்டம் இது. நிர்வாகத்தில் உள்ள ஒரு சிலரின் தவறான நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த நிறுவனத்திற்கும் அபகீர்த்தி ஏற்படுகிறது.

எது எப்படியிருந்தாலும், எனது முழு உடன்பாடு இல்லாமல் எனது நூல் தொடர்பில் நோர்வே தமிழ்ச் சங்கத்தினால் இனி முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் நிறுவன வன்முறையாகவும் அற மீறலாகவுமே இருக்கும். (எனது நூலில் எத்தகைய மாற்றங்களையும் உள்ளீடுகளையும் யாரும் செய்ய முடியாது.) அத்தகைய நிலை இனியும் ஏற்படுமாயின், என்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். தேவை ஏற்படுமாயின், மின்னஞ்சல் மற்றும் மெசஞ்சர் உரையாடல்கள், உரையாடல் ஒலிப்பதிவுகள், எனைய ஆதாரங்கள், எனது ஒளிப்பட நூலின் மாதிரிப் பிரதிகள், ஒப்பந்தம் போன்றவை பயன்படுத்தப்படும்.

என் பக்கம் உண்மையும் ஆதாரங்களும் உள்ளவரை நான் யாருக்கும் பயந்து ஒதுங்கிவிட மாட்டேன். எல்லாக் கேள்விகளுக்கும் என்னிடம் நியாயமான பதில்கள் இருக்கின்றன. எல்லா அவறூதுகளையும் குழிபறிப்புகளையும் கடக்கும் அறவலிமை கொண்டிருக்கிறேன். என்னுடன் இணக்கமாகப் பேசி, அனைத்தையும் பரிசீலித்து எனது நூலை சுமூகமாக வெளியிட நோர்வே தமிழ்ச் சங்கம் முன்வருமாயின் அதனை வரவேற்பேன். எனது வேண்டுகோள், எதையும் தீர ஆராய்ந்து பிரச்சினைகளை அறவழியிலும் அறிவுபூர்வமாகவும் தீர்த்துக்கொள்ளுங்கள். முடியவில்லையெனில் எதையும் செய்யாமல் ஒதுங்கிக்கொள்ளுங்கள். எனக்கு எதிராக முன்வைக்கப்படுகிற அவதூறுகளையெல்லாம் சகித்துக்கொண்டு, ஈழத்தமிழ்ச் சமூகத்தின் வருங்கால நன்மை கருதியே நான் செயற்படுகிறேன்.

இப்படிக்கு,
அமரதாஸ்
2019-11-08 //

நோர்வே தமிழ்ச் சங்கத்தின் மோசடியான அறிக்கையினைப் பகுதிபகுதியாக முன்வைத்து, எனது மறுப்புக் கருத்துகளையும் உண்மைத் தகவல்களையும் சுருக்கமாகக் கீழே பதிவுசெய்திருக்கிறேன்.
 
நோர்வே தமிழ்ச் சங்க அறிக்கையின் தலைப்பு :
 
//அமரதாஸினால் நோர்வே தமிழ்ச் சங்கத்திற்கு வழங்கப்பட்ட போர்க்காலப் பதிவு தொடர்பான புகைப்படங்களினால் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பாக தமிழ்ச் சங்கத்தின் அறிக்கை //
 
எனது கருத்து :
 
அறிக்கையின் தலையங்கமே தவறானது. நூலாக்கத்திற்கென யாரிடமும் நான் எனது ஒளிப்படங்களை (புகைப்படங்கள்) வழங்கவில்லை. எனது கணினியில் எனது ஒளிப்படங்களை ஒருங்கிணைத்து, எனது நூலை நானே வடிவமைத்திருக்கிறேன். 
 
நோர்வே தமிழ்ச் சங்க அறிக்கையின் பகுதி :
 
//முள்ளிவாய்க்கால் அவலங்கள் நடைபெற்று 10 ஆண்டுகளாகிய பின்பும் அவை பற்றியஆவணங்கள் எமது சமூகத்தினால் குறிப்பிடக்கூடிய அளவுக்கு இதுவரைஆவணப்படுத்தப்படவில்லை. இந்தக் குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் நோக்கில் நோர்வே தமிழ்ச்சங்கமானது, ஒரு சமூக நிறுவனமாகத் தன்னால் சாத்தியப்படக்கூடிய அளவிற்கு இவற்றை ஆவணப்படுத்தி வெளியிடும் நோக்கோடு முள்ளிவாய்க்கால்அவலம் மற்றும் வன்னியின் இறுதிப் போர்க்காலப் புகைப்படங்களை ஆவணமாக்கும்முயற்சியில் ஈடுபட விரும்பியது.தமிழ்ச் சங்கத்தின் 40ஆவது ஆண்டு நிறைவின் போது இந்த ஆவணத்தை வெளியிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்த நோக்கின் முதற்கட்டமாக பல இடங்களிலும் போர் தொடர்பான புகைப்படங்களைக் கண்காட்சியில் வைத்துக்கொண்டிருக்கும் அமரதாஸின் புகைப்படங்களை ஆவணமாக்கலாம் என்ற யோசனை முன்மொழியப்பட்டு ஏற்கப்பட்டது. இதற்கான பொறுப்பு தமிழ்ச்சங்கத்தின் தலைவர், செயலாளர் ஆகியோரிடம் சங்கத்தினால் ஒப்படைக்கப்பட்டது. செயலாளர் திரு அமரதாஸிடம் தொடர்பு கொண்டு உரையாடியதை அடுத்து இதற்கென அமரதாஸினால் வழங்கும் புகைப்படங்கள் புத்தக வடிவில் ஆவணமாக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பானதும், இந்நூலை தயாரிக்கிற ஒப்பந்தம் அமரதாஸுடன் நோர்வே தமிழ்ச் சங்கத்தினால் செய்துகொள்ளப்பட்டது. இருதரப்பும் உடன்பட்ட அடிப்படையில் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்தத்திட்டத்தின் முன்னெடுப்புகள், செயற்பாடுகளைப் பற்றி தமிழ்ச் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்களுக்கு மாதாந்தம் நடைபெற்ற செயற்குழுக் கூட்டங்களின் போது செயலாளரால் தெரிவிக்கப்பட்டு வந்தது. அப்போது இந்தப் புகைப்படங்களின் உரிமம் குறித்த சர்ச்சைகள் இருக்கின்றன என நாம் அறிந்திருக்கவில்லை. அமரதாஸும் இதைப்பற்றி எம்மிடம் தெரிவிக்கவில்லை.
 
ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தப் புகைப்பட நூலாக்கப் பணிகளில் வெளியீட்டாளர் சார்பில் சஞ்சயனும் புகைப்படங்கள், உள்ளடக்கம் பற்றிய விடயங்களில் அமரதாஸும் இணைந்து பணியாற்றி வந்தனர். நூலின் வெளியீட்டிற்கான முதலீடு / தயாரிப்பு, பதிப்பு, வெளியீடு ஆகியவற்றையும் தமிழ்ச்சங்கம் பொறுப்பேற்றது. இந்த ஒழுங்கில் நூலிற்கான படத்தேர்வுகள் முதற்கொண்டு தயாரிப்புப் பணிகள் அனைத்தும் முடிவுறும் தறுவாயில் நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 40ஆவது ஆண்டு நிறைவு விழா அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் இந்தப் புகைப்பட ஆவண நூலான Through The Grey Zons மும் திட்டமிடப்பட்டபடி வெளியிடப்படவுள்ளது என்ற அறிவிப்பும் இணைக்கப்பட்டது. 
 
அப்போது எம்முடன் மின்னஞ்சல் மூலமாகவும் தொலைபேசி வழியாகவும் தொடர்பு கொண்ட ஊடகத்துறைப் போராளிகள் (அந்த அமைப்பின் ஒளிக்கலைப் பிரிவு மற்றும்ஊடகத்துறையில் ஈடுபட்டவர்கள்) நோர்வேயில் உள்ள தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் மற்றும் இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா, பாரிஸ்,சுவிற்சர்லாந்து, கனடா ஆகிய நாடுகளில் இருந்தும் மேற்படி புகைப்பட நூலில் தம்மாலும் தம்முடனும் இணைந்து பணியாற்றிய மாவீரர்களாலும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பல உள்ளடக்கப்பட்டிருக்கலாம் என்று தாம் கருதுவதாகக் குறிப்பிட்டனர். இது எமக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
 
“இதற்கான ஆதாரம் என்ன? புத்தகம் வெளியிடப்படுவதற்கு முன்பு இந்தப் புத்தகத்தில் உள்ள படங்களைப் பற்றி நீங்கள் எப்படி இவ்வாறு கூற முடியும்?” என்று நாம்அவர்களிடம் விளக்கம் கோரியிருந்தோம். இதற்குப் பதிலளித்த அவர்கள், ஏற்கனவே பல சந்தர்ப்பங்களிலும் தம்மால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அமரதாஸ் பயன்படுத்தி வந்திருக்கின்றார். அமரதாஸினால் முன்பு நடத்தப்பட்ட கண்காட்சிகளில் இதனை நாம் அவதானித்திருக்கின்றோம். எனவே ஒரு முன்னறிவிப்பாக இதைத் தங்களுக்குத் தெரியப்படுத்துகின்றோம். இது தொடர்பாக மேலதிக விபரங்கள் தேவையென்றால் அவற்றை வழங்குவதற்குத் தயாராக உள்ளோம் என்று தெரிவித்தனர்.
 
“இதைப்பற்றி நீங்கள் அமரதாஸுடன் தொடர்பு கொண்டு பேசவில்லையா?” என்று கேட்டிருந்தோம். அதற்கு அவர்கள், “இந்த விடயம் பற்றி நாம் ஏற்கனவே பல வழிகளிலும் அமரதாஸுடன் பேசியிருக்கின்றோம். பொது வெளியிலும் எழுதியுள்ளோம். மூத்த போராளிகள் பலரும்கூட நேரில் அமரதாஸிடம் இதைப் பற்றிச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். ஆகவே இந்தப் படங்களின் உரிமைப் பிரச்சினையைப் பற்றி அமரதாஸிற்கு நன்றாகத் தெரியும். அப்படிச் சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கும் போது அதற்குத் தீர்வு காணாமல் தமிழ்ச் சங்கத்திற்கு அவர் எப்படி தனது பெயரில் படங்களைக் கொடுக்க முடியும்” என்று பதிலாகக் கேட்டனர்.
 
இதனையடுத்து நாம் இந்தப் படங்களைக் குறித்த சர்ச்சை பற்றி அமரதாஸுடன் தொடர்பு கொண்டு கேட்டோம். அப்பொழுதும் அவர் இந்தப் படங்கள் அனைத்தும் தன்னுடையவையே என்று குறிப்பிட்டார். விசமிகளின் வதந்திகளை கருத்துக்களைக் கவனத்தில் எடுக்க வேண்டாம் என்றும் எங்களை அமைதியாக இருக்குமாறும் அறிவுறுத்தினார். ஆனாலும் இந்த நூலை வெளியிடும் நிறுவனமாகிய நாம் போராளிகளின் இந்தக் கோரிக்கையை கவனத்தில் எடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்புக்குள்ளானோம். போராட்டத்தில் ஈடுபட்டு, போரினால் பாதிக்கப்பட்டு, உடல் உள நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கும் போராளிகளின் குரலையும் அவர்களுடைய நியாயத்தையும் புறக்கணிக்காமல் கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதில் எமது செயற்குழு தீர்மானமாக இருந்தது.
 
புத்தகத்தில் உள்ளடக்கப்படும் படங்களில் போராளிகள் குறிப்பிடுவதைப் போன்று அவர்களின் படங்களும் இருக்கும் பட்சத்தில், அது தமிழ்ச் சங்கத்தால் போராளிகளுக்கு இழைக்கப்படும் பெரும் வரலாற்றுத் துரோகமாக அமைந்துவிடும். அந்தத் தவறுக்கு நோர்வே தமிழ்ச்சங்கம் இடமளிக்கக் கூடாது என்பதால், நாம் ஐரோப்பாவில் வாழும்ஒளிப்படத்துறைக்கும் வேறு பிரிவுகளுக்கும் பொறுப்பாக இருந்த ஒரு மூத்த போராளியைச் சந்தித்து உண்மையை அறிய முயன்றோம். இந்தச் சந்திப்புத் தொடர்பாக தமிழ்ச்சங்க நிர்வாகமே முடிவெடுத்திருந்தது.
 
இதன்படி செயலாளர் ஐரோப்பிய நாடொன்றுக்கு சென்று மேற்கூறிய பொறுப்பாளரைச்சந்தித்து விபரங்களை அறிய முற்பட்ட வேளை, எமது நூலில் உள்ளடங்கியிருக்கும் படங்களில் பல அவரிடம் உள்ளதைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. அதேவேளைஅவற்றில் உள்ள Metadata களும் அக்காலத்தைக் குறிப்பனவாக இருந்தன.
 
அத்துடன் அமரதாஸின் முகப்புத்தகப் பதிவுகள் மற்றும் Tervor Grant இன் Sri Lanka Secrets நூலில் உள்ள புகைப்படங்களும் குறித்த பொறுப்பாளரிடம் இருந்தன. இது எமக்கு அதிர்ச்சியை அளித்தது. Sri Lanka Secrets நூலிற்காக Tervor Grant இற்குத் தானே அந்தப் புகைப்படங்களைக் கொடுத்திருந்தேன் என்று அமரதாஸ் ஏற்கனவே எம்மிடம்கூறியிருந்தார்.
 
இதைப் பற்றி குறித்த பொறுப்பாளரிடம் நாம் கேட்ட போது, அந்தப் புத்தகத்திற்கு யாரிடமிருந்து புகைப்படங்களைப் பெற்றேன் என்று Tervor Grant அந்தப் புத்தகத்திலேயே தெளிவாகக்குறிப்பிட்டிருந்ததைக் குறித்த பொறுப்பாளர் சுட்டிக்காட்டினார். அதற்கான ஆதாரத்தையும் அவர் மெய்ப்பித்தார். இதே கருத்தினை வேறு போராளிகளும் எம்மிடம் தொலைபேசி வழியாகத் தெரிவித்தனர். இவை அமரதாஸின் புகைப்படங்களின் உரிமம் பற்றிய நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தப்பட வேண்டிய தார்மீகப் பொறுப்பனை எம்மீது சுமத்தியது. ஆகவே, இந்த விடயத்தை நாம் மிகவும் பொறுப்புடன் கையாள வேண்டும் என்றும் தீர்மானித்தோம்.
 
மேலும் குறித்த பொறுப்பாளர் தெரிவித்ததாவது, “அமரதாஸ் இந்தப் படங்களை ஜெனீவா அரங்கு தொடக்கம் பல்வேறு இடங்களிலும் காட்சிப்படுத்தி வந்த போது அவற்றைப் பொது வெளியில் நாம் கண்டிக்காது விட்டதற்குக் காரணம், போர்க்குற்றங்களைப் பேசும் காலத்தில் அதற்கான ஆவணங்களைப் பற்றிய சர்ச்சைகளைக் கிளப்புவது அதை நீர்த்துப் போகச் செய்துவிடும். அது எமது போராட்டத்திற்கும் இனத்திற்கும் மாறான செயலாக அமைந்து விடக்கூடியதாக மாறிவிடும் என்பதால் அமைதி காத்தோம்” என்றார்.
 
ஆனால் 30 வருட போராட்டத்தை நிகழ்த்திய ஒரு விடுதலை இயக்கம் தனது மக்களின் அவலங்களையும் அதற்கான சாட்சியங்களையும் ஆவணப்படுத்தவில்லை என்பதாகவும் இச்செயற்பாட்டில் ஈடுபட்டுழைத்தவர்களின் அர்ப்பணிப்பை மறுப்பதுபோன்றும் உயிரிழந்த போராளிகளின் உயரிய பங்களிப்பை மறைப்பதாகவும் அமரதாஸ் தனது செயற்பாடுகளின் ஊடாகச் சித்தரிப்பதை இனியும் எம்மால் பொறுக்க முடியாததாலேயே தமிழ்ச் சங்கத்திடம் இதைத் தெரியப்படுத்தினோம்.
 
பலருடைய அர்ப்பணிப்பான கூட்டு உழைப்பை தனியொருவர் தன்னுடையது என்று உரிமை கோருவது நீதியற்றது. “அதற்காக இந்த நூலினை தமிழ்ச் சங்கம் வெளியீடு செய்வதை நாம் தடுக்கவில்லை. இது கட்டாயமாக வெளிவரவேண்டியதொரு ஆவணம். நோர்வே தமிழ்ச் சங்கம் விரும்பினால், இந்தப் புகைப்பட நூலில் உள்ள படங்களைப் பற்றிய சர்ச்சை இருக்கிறது என்ற தகவலை வாசகர்களுக்கு அறிவித்துவிட்டு வெளியிடலாம்“ என்றார். இதனையே சம்பந்தப்பட்ட ஏனைய போராளிகளும் எம்மிடம் தெரிவித்தனர்.
 
மிகுந்த பொறுப்புடன் ஆவணப்படுத்தப்படும் நூல் என்னும் காரணமாக, உண்மை அதற்கான நேர்மையோடு பேசுவதாக இருக்க வேண்டும் என்பதால் அமரதாஸிடம் மீண்டும் மீண்டும் படங்கள் உங்களுடையவையா என்று கேட்ட போது அவர் அனைத்தும் தனது புகைப்படங்களே என்றார். தொடர்ந்து விசாரித்ததில், இணையத்திலும் இலங்கையில் வாழும் பலரிடத்திலும், வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களிடத்திலும் இச்சர்ச்சை பல ஆண்டுகளாகவே இருந்து வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது. அதனால், “இந்த நூலில் உள்ள புகைப்படங்களின் உரிமம் மீதான சர்ச்சை உண்டு என்பதை வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம்” என்ற அறிவிப்பை மட்டும் நூலில் இணைத்து இந்த நூலினை வெளியிடலாம் என்று அமரதாஸிற்கு எம்மால் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து இதற்கு மேல் தாமதித்து முடிவெடுப்பதற்கான கால அவகாசம் எமக்கிருக்கவில்லை. தமிழ்ச் சங்கத்தின் 40 ஆவது ஆண்டுவிழா மிக நெருங்கி வந்திருந்தது. எமது நிலைப்பாட்டினை அமரதாஸ் முற்றிலுமாக மறுத்தார். முழுவதும் தன்னுடைய படங்களே அவை எனத் தொடர்ந்தும் வாதிட்டதுடன், நூலில் எதுவித மாற்றத்தையும் அனுமதிக்க மாட்டேன் என்றார். இதன் பின்பே நூல் வெளியீடு பற்றிய சர்ச்சை எழுந்தது. அமரதாஸின் பதிலும் பின்வரும் சர்ச்சைக்குரிய விபரங்களும் செயற்குழுவில் ஆராயப்பட்டன.
 
1. ஒப்பந்தப்படியும் நாமே இந்நூலின் தயாரிப்பாளர்கள் ஆவோம். இருப்பினும் ISBN பதிவிலக்கத்தில் உள்ள தயாரிப்பாளர்/வெளியீட்டாளர் விபரங்களை எமக்குத் தெரியாமல் தன்னிச்சையாக தனது பெயருக்கும்/ நிறுவனத்திற்கும் அமரதாஸ் மாற்றிக் கொண்டுள்ளார். (பொதுவான நூல் வெளியீட்டு நியதியின்படி தயாரிப்பாளர் என்பவரே வெளியீட்டாளராவார்)
 
2. இந்தப் புகைப்படங்கள் பற்றிய பாரிய சர்ச்சை ஏற்கனவே பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது என்பதையும் இந்தத் திட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே எமக்கு மறைத்து வந்துள்ளார்.
 
3. Tervor Grant இன் Sri Lanka Secrets நூலில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் தனது புகைப்படங்களே என்று அமரதாஸ் குறிப்பிடுவதாலும் அவை எமது நூலிலும் காணப்படுவதால் அமரதாஸ் Tervor Grant இற்கு அனுப்பியதற்கான ஆதாரங்களை முன்வையுங்கள் என்று ஒரு வாரத்திற்கும் மேலாகக் கேட்டுக்கொண்டிருக்கின்றோம். அவர் இன்று வரை நம்பத்தகுந்ததான ஒரு சிறு ஆதாரத்தையேனும் முன்வைக்கவில்லை.
 
4. ஒளிப்படத்துறை பொறுப்பாளரின் புகைப்படங்கள் பற்றிய கதை மற்றும் விளக்கங்களுக்கும் அமரதாஸின் விளக்கங்களுக்குமிடையில் வேறுபாடுகள் உண்டு.
 
இவற்றை ஆராய்ந்த செயற்குழு, இவை அனைத்தும் ஒப்பந்த மீறல்கள் என்பதால் அமரதாஸுடனான தொடர்புகளை தற்காலிகமாக நிறுத்தவும், அவரது நேர்வேக்கான விமானப் பயணச்சீட்டை இரத்துச் செய்யவும் நிர்வாகம் முடிவெடுத்தது. செயற்குழுவின் அறிவித்தலை நாம் அமரதாஸிற்கு அறிவித்த பின்னர், அமரதாஸ், ஒஸ்லோவில் வாழும் ராஜன் செல்லையா மூலமாக எம்முடன் இரு தடவைகள் தொடர்பு கொண்டார்.
 
“அமரதாஸ் தன்னிடம் ஆதாரங்கள் உள்ளன” என்று சொல்கின்றார். அவற்றை நேரடியாக மட்டுமே முன்வைக்கலாம் என்பதால் அவருடைய ஆதாரங்களைச் சமர்ப்பிக்க அமரதாஸிற்குச் சந்தர்ப்பம் வழங்குவதற்கு வாய்ப்பளிக்குமாறு ராஜன் செல்லையா கேட்டுக் கொண்டார்.
 
ஒப்பந்த மீறலின் காரணமாக இந்தக் கோரிக்கையை முதலில் மறுத்த நாம், அக்கூற்றில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டதனால் அமரதாஸிற்கு பின்வருமாறு குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பி வைத்தோம்.
 
25.10.2019 வெள்ளிக்கிழமை அன்று எமது 40ஆம் ஆண்டுக்கான இரண்டு விழாக்களுக்குமான ஒத்திகை ஆயத்தங்கள் உண்டு. நிகழ்வுக்கான ஒழுங்குகள், ஒருங்கிணைப்புகள் செய்ய வேண்டும். எனவே முழு நிர்வாகமும் உங்களைச் சந்திப்பது சாத்தியமல்ல. நிச்சயமக தலைவரும் செயலாளரும் உங்களைச் சந்திப்பார்கள் என. நேரப்பற்றாக்குறை காரணமாக குறுகிய நேரமே உங்களைச் சந்திக்க முடியும் என்றும் அமரதாஸிடம் அறிவித்திருந்தோம். இதன்படி அவரை விமான நிலையத்திலிருந்து அழைத்து வந்து உரையாடிய போது அமரதாஸ், எம்மால் எழுப்பப்பட்ட புகைப்படங்களின் ஆதாரங்கள் பற்றிய கேள்விகளுக்கு உரிய பதிலைத் தரவில்லை. அப்பொழுது அமரதாஸ் முன்னிலையில் ஐரோப்பாவில் தற்போது வதியும் மேற்குறித்த பொறுப்பாளருடன் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு “நீங்கள் ஏற்கனவே அமரதாஸுடன் இப்புகைப்படங்கள் பற்றி ஏற்கனவே உரையாடியுள்ளீர்களா என்றோம்”. அவர் “ஆம்“ என்றார். அமரதாஸும் அதனை ஏற்றுக் கொண்டார். இப்புத்தகத்தின் பதிப்புக்காக பெறப்பட்ட ISBN தகவலில், பதிப்பாளர் குறித்த மாற்றத்தைப் பற்றிக் கேட்கப்பட்ட போது, அது தனது உரித்துக்குரியது என்றே வாதிட்டார். அப்படியென்றால் இதிலே தமிழ்ச் சங்கத்தின் பங்கு என்ன என்ற போது புத்தகத்தை நோர்வேயில் வெளியிடுவது மட்டுமே என்றார்.
 
நோர்வே தமிழ்ச் சங்கம் ஒரு பொது அமைப்பு என்ற வகையில் அதனுடைய பொறுப்பு, அதற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி போன்றவற்றை விளக்கிக் கொண்டு செயற்படுங்கள். Tervor Grant இன் Sri Lanka Secrets நூலில் உள்ளவை உங்களது புகைப்படங்கள் என்று நீங்கள் சொல்வதால் அவற்றை நீங்கள் Tervor Grant இற்கு அனுப்பியதற்கான ஆதாரம் ஒன்றினை முன்வையுங்கள் என்ற போது, ஆதாரங்களை முன்வைக்க முடியாமல் தொடர்ந்து பிடிவாதம் செய்து பொருத்தமற்றதும் எம்மால் ஏற்க முடியாததுமாகும் என்று குறிப்பிட்டோம்.
 
தமிழ்ச் சங்கத்தின் 40ஆம் ஆண்டு விழாவில் புத்தகத்தை வெளியிடுவது என்று அறிவித்திருப்பதால் இதற்குரிய ஏற்பாட்டை நாம் செய்ய வேண்டும் என்று எம்மால் அமரதாஸிற்குத் தெரிவிக்கப்பட்டது. அமரதாஸ் தொடர்ந்தும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத விளக்கங்களை முன்வைத்துக் கொண்டேயிருந்தார். போராளிகள், ஏன் பொது வெளிக்கு வந்து இவை தம்முடைய படங்கள் என்பதை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க முடியாது? அவர்களால் ஏன் பொது வெளியில் முகம் காண்பித்துப் பேசமுடியாது இருக்கின்றது? அவர்களுக்கு என்ன பிரச்சினையிருக்கின்றது இதைப்பற்றிப் பேச? இப்போது அனைவரும் பேசும் நிலை உள்ளதே என்று, எமது தேசத்திற்காக அனைத்தையும் இழந்து தற்போது இக்கட்டான சூழ்நிலைகளில் மாற்றுத்திறனாளிகளாக வாழும் போராளிகளை எதுவித மனச்சாட்சியும் நியாயமும் இன்றி எடுத்தெறிந்து பேசியதால், இதனையடுத்து உரையாடல் வாக்குவாதமாகியது. இதன்போது சஞ்சயனால் கடுமையான சொற்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் பின்னர் அவர் தன்னை ராஜன் செல்லையா வீட்டில் இறக்கி விடுமாறு கேட்டுக்கொண்டார். நாமும் அவரை அங்கேயே இறக்கிவிட்டோம். இந்தச் சர்ச்சையின் சாராம்சம் புகைப்படங்களின் உரிமத்திலிருந்தே எழுந்தது. அதற்குத் தீர்வு காணப்படுவதே முக்கியம். ஆனால், இந்தப் படங்களுக்கான உரிமத்தைக் கோருவோரில் சிலர் இலங்கையில் உள்ளனர். சிலர் புலம் பெயர்ந்து ஐரோப்பா, அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் பல நாடுகளில் இருக்கிறார்கள். இவர்களை ஒருங்கிணைப்பது இலகுவானதல்ல. அதோடு சிலருக்கு இதில் பாதுகாப்புப் பிரச்சினைகளும் உண்டு. இதனையே தனக்கான வாய்ப்பாக அமரதாஸ் பயன்படுத்திக் கொள்கிறார்.
 
படங்களை உரிமம் கோருவோர், வந்து அதை நிரூபியுங்கள் என்று அமரதாஸ் கேட்பது அந்தப் போராளிகளை நெருக்கடிக்குள்ளாக்குவதுடன் அது உடனடியாக சாத்தியமற்றது என்பதால்தான். ஆகவே, இவ்வாறு சிக்கலுக்குள்ளாகியிருக்கும் இந்த நியாயத்திற்கான பிரச்சினையை சஞ்சயன் உடனான தனிப்பட்ட விவகாரமாகச் சிலரும் தமிழ்ச் சங்கத்தின் விவகாரமாகச் சிலரும் பொது வெளியில் கருத்துரைத்து வருவதைக் கண்டு வருந்துகிறோம். //
 
எனது கருத்து :
 
இலங்கையின் இறுதிப் போர்க்காலத்தில், என்னால் உருவாக்கப்பட்ட ஒளிப்படங்களை முன்வைத்துப் பல்வேறு சுயாதீன முயற்சிகளில் ஈடுபட்டு வந்திருக்கிறேன். சர்வதேச அளவில் பல ஒளிப்படக்காட்சிகளை நிகழ்த்தியிருக்கிறேன். அந்த ஒளிப்படங்களை நூல்களாக்கி வெளியிடவேண்டும் என்று, பல்வேறு இடங்களிலும் எனது நேர்காணல்களிலும் சொல்லி வந்திருக்கிறேன். நான் பயன்படுத்தும் போர்க்கால ஒளிப்படங்களுக்குளே நான் உருவாக்காத சில படங்களும் கலந்திருப்பதாக, ‘போலிச் செய்திகளை’ அல்லது வதந்திகளை விசமிகள் சிலர் திட்டமிட்டுப் பரப்பியிருக்கின்றனர். அவற்றை மறுத்தும் கண்டித்தும் எனது எதிர்வினைகளை அவ்வப்போது பொதுவெளியிலே பதிவு செய்திருக்கிறேன். போர்க்கால ஒளிப்படங்களை நூலாக்கும் வேலைகளைத் தொடங்கிய காலத்தில், நோர்வே தமிழ்ச் சங்கம் சார்ந்து யாரையும் நான் அறிந்திருக்கவில்லை. நோர்வே தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக இருக்கும் திரு. சஞ்சயன் செல்வமாணிக்கம் (Sanjayan Selvamanickam) என்பவரை, ஏற்கெனவே அறிந்திருந்தேன். சஞ்சயன் என்னைத் தொடர்புகொண்டு, நோர்வே நாட்டிலும் எனது ஒளிப்படக்காட்சியை நடாத்தலாம் என்ற கருத்தை முன்வைத்திருந்தார். எனது நூலாக்க முயற்சியை அறிந்து, நோர்வே தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையினைப் பெற்றுத்தர  முன்வந்தார். அந்த வகையிலே, நோர்வேயில் இயங்கும் Fritt Ord என்ற நிறுவனத்திடம் எனது நூல் உருவாக்கம் தொடர்பான திட்டத்தை முன்வைத்து, அந்த நிறுவனத்திடமிருந்து நிதியுதவிக்கான உத்தரவாதத்தினைப் பெற்றுக்கொண்டார். எனது ஒளிப்பட நூல் வெளியீட்டு முயற்சியானது, Fritt Ord நிறுவனத்தின் நிதியுதவியில் முன்னெடுக்கப்படுவதாகவே இருந்தது. இதில், நோர்வே தமிழ்ச் சங்கத்தின் பங்கு ‘அனுசரணை’ வழங்குதல் ஆகும். வேறு வகையிலே சொல்வதானால், ‘இடைத்தரகர்’ பாத்திரத்தினையே அது கொண்டிருந்தது.
 
Fritt Ord நிறுவனத்தின் நிதியைப் பெற்று, அதனைக் கொண்டு நூல் வெளியீட்டிற்கான செலவுகளை ஈடுசெய்யும் பொறுப்பினை நோர்வே தமிழ்ச் சங்கம் ஏற்றுக்கொள்ளும் என்று சஞ்சயன் வாக்குறுதியளித்திருந்தார். எனது நூலுக்கு, THROUGH THE GREY ZONES என்ற பெயர் வைத்தேன். அதற்கான ஒளிப்படங்கள் அனைத்தும் தேர்வுசெய்யப்பட்டு, எனது கணினியிலே நூலின் முழுமையான வடிவமைப்பு என்னால் மேற்கொள்ளப்பட்டது. TeamViewer மூலமாக எனது கணினியிலே சில தடவைகள் நுழைந்து, நூல் வடிவமைப்புச் சார்ந்த தொழில்நுட்ப உதவியை வழங்கியிருக்கிறார் சஞ்சயன். நூலின் வடிவமைப்பை முழுமையாக முடித்து, அச்சுக்கான PDF மூலப்பிரதியை நானே நேரடியாக அச்சகத்துக்கு வழங்கியிருந்தேன்.
 
எனது நூல் உருவாக்கம் தொடர்பில் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வது நல்லது என்று சஞ்சயன் ஆரம்பத்திலே குறிப்பிட்டிருந்தபோதும், அது அப்போது செய்யப்படவில்லை. பெரிதாக அதிலே நான் அக்கறை கொண்டிருக்கவில்லை. நூலாக்க வேலைகளைப் பல மாதங்கள் தொடர்ந்து செய்தேன். நூலின் அச்சு வேலைகள் நிறைவடைந்த சமயத்தில், நூல் வெளிவரவிருக்கும் செய்தியைப் பொதுவெளியில் நானே முதலில் அறிவித்தேன். அதிலே, Wide Vision Studio சார்பில் எனது நூல் வெளியிடப்படுவதாகவும், சில நண்பர்களதும் ஒரு தமிழ் அமைப்பினதும் ஆதரவு (அனுசரணை) கிடைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தேன். பிறகு, நூல் தொடர்பிலே நோர்வே தமிழ்ச் சங்கமும் விளம்பரம் வெளியிட்டது. இவற்றின் பின்னரே நூல் தொடர்பான சர்ச்சைகள் வலுவடைந்தன. சர்ச்சையாளர்கள் யாரும் என்னைத் தொடர்புகொள்ளாமல் சஞ்சயனைத் தொடர்புகொண்டிருக்கிறார்கள். அவர்களையும் அவர்களது முறைப்பாடுகளையும் என்னிடமிருந்து சஞ்சயன் மறைக்கத்தொடங்கினார். இந்த நிலையில், அவசரகதியிலே நூல் தொடர்பிலான ஒப்பந்தம் ஒன்றினைச் செய்துகொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டேன். நல்லெண்ணத்துடன் நானும் உடன்பட்டு, ஒப்பந்தத்திலே முக்கியமாக இடம்பெறவேண்டிய விடயங்கள் குறித்த எனது கருத்துகளை மின்னஞ்சல் ஊடாக முன்வைத்தேன். ”நூலில் இடம்பெறும் ஒளிப்படங்களுக்கான காப்புரிமை, நூலின் பதிப்புரிமை அல்லது வெளியீட்டுரிமை அனைத்தும், நூலில் குறிப்பிட்டுள்ளபடி அமரதாஸ் அவர்களுக்கானது.” இப்படி, நான் அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றிலே குறிப்பிட்டிருக்கிறேன்.

நோர்வே தமிழ்ச் சங்கம் சார்பிலே என்னுடன் தொடர்பிலிருந்த சஞ்சயன், எனது கையெழுத்திற்காக ஒப்பந்த வரைவினை அவசரகதியிலே அனுப்பியபோது, சில தவறுகள் அல்லது திரிபுகள் மற்றும் தெளிவின்மைகள் இருப்பதை என்னால் உணரமுடிந்தது. ஒப்பந்தம் குறித்த எனது பரிந்துரைகள், முழுமையாகவோ தெளிவாகவோ உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. முரண்பாடுகளைத் தவிர்த்து, நூல் வெளியீட்டைச் சுமுகமாக முன்னெடுக்கும் நல்லெண்ணத்துடன் ஒப்பந்தம் குறித்த மேலதிகத் திருத்தங்களை வலியுறுத்துவதை நிறுத்திக்கொண்டேன். எது எப்படியிருந்தாலும், இப்போதைய முரண்பாட்டு நிலையிலே அந்த ஒப்பந்தமானது முக்கியத்துவம் கொண்டதாகிறது. இந்த நூலின் ‘வெளியீட்டாளர்’ யார் என்ற தெளிவான தகவல் ஒப்பந்தத்திலே இடம்பெறவில்லை. ஒப்பந்த நகலை முன்வைத்தே அதுபற்றி விரிவாக விளக்க முடியும். ஒப்பந்த முன்னெடுப்பானது, நோர்வே தமிழ்ச் சங்கத்தின் நோக்கு நிலையிலே தந்திரமானதும் உள்நோக்கம் கொண்டதுமான செயற்பாடாகவே இருந்திருக்கிறது. எது எப்படியிருந்தாலும், இப்போதைய முரண்பாட்டு நிலையிலே எனக்கான சட்டரீதியான பாதுகாப்பை வழங்கக்கூடியதாகவே அந்த ஒப்பந்தம் அமைந்திருக்கிறது. ஒப்பந்தத்துக்கு அப்பால், நூலின் காப்புரிமையாளரும் வெளியீட்டாளரும் அமரதாஸ் ஆகிய நான் தான் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் உள்ளன. 

வெளியீட்டாளர் பற்றிய விபரத்தை நான் மாற்றியிருப்பதாகச் சொல்லியிருப்பது, அப்பட்டமான பொய். நூல் தொடர்பான எந்தவிதமான உரிமைகளும் என்னுடையதாகவே இருக்கும் என்பது, நோர்வே தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக உள்ள சஞ்சயனுக்கும் எனக்கும் இடையில் இருந்த உடன்பாடு. முதலில் ISBN இலக்கம் சுவிஸில் பெறுவதாக இருந்தது. அதை உடனடியாகப் பெறுவதில் எனக்குச் சிரமம் இருந்தமையாலே தான், சஞ்சயன் நோர்வேயில் எடுத்துத் தந்திருந்தார். ISBN இலக்கத்திற்கான பதிவை மேற்கொள்ளும் போது, நோர்வே தமிழ்ச் சங்கமே நூலின் ‘வெளியீட்டாளர்’ என்று பதிவு செய்திருக்கிறார். ஒரு நூலாசிரியருக்கு அல்லது வெளியீட்டாளருக்குப் பண உதவி செய்கிறவர், வெளியீட்டு உரிமையாளராக முடியாது. அது சாத்தியமெனில், எனது நூலுக்கான நிதியை வழங்க முன்வந்த Fritt Ord நிறுவனம் தான் வெளியீட்டாளராக இருந்திருக்க முடியும். இடைத்தரகராக இருந்த நோர்வே தமிழ்ச் சங்கம், எனது நூலின் வெளியீட்டு உரிமையினை வஞ்சகமாகப் பறிக்க முனைந்திருக்கிறது. எனது நூலுக்கான முதலாவது விளம்பரத்தை, வீடியோ வடிவில் நான் தான் வெளியிட்டிருக்கிறேன். (2019-09-17) அதில், Wide Vision Studio நூல் வெளியீட்டைச் செய்வதாகச் சொல்லியிருக்கிறேன். அதை முகநூலில் நான் பதிவிட்ட பின்னர், நோர்வே தமிழ்ச் சங்கச் செயலாளர் சஞ்சயன் அதற்கு ‘இதயக்குறி’ (Love) போட்டிருக்கிறார். 

நூலின் இரண்டாம் பக்கமானது, நூல் உருவாக்கத்தின் ஆரம்பத்தில் இருந்தது போலவே இப்போதும் இருக்கிறது. புதிதாக நான் திட்டமிட்டு எந்த மாற்றமும் செய்யவில்லை. இதனை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும். ஏற்கெனவே அச்சாக்கம் செய்யப்பட்டு, எனக்கும் சஞ்சயனுக்கும் வந்திருக்கும் நூல்களிலே ‘Publisher & Copyright owner: Wide Vision Studio, Amarathaas’ என்ற பதிவு மிகத் தெளிவாகவே இருக்கிறது. அதைப் பார்த்துவிட்டு  நோர்வே தமிழ்ச் சங்கம் சார்ந்த யாரும் இது பற்றி அப்போது கேட்கவேயில்லை. இரண்டாம் பக்கத்தில், ‘Layout & disign’ பகுதியிலே தன் பெயரையும் உள்ளிடுமாறு சஞ்சயன் சொல்லியிருந்தார். ‘Publisher & Copyright owner’ பகுதியை அவர் கவனிக்காமலா விட்டிருப்பார்?

ISBN இலக்கமானது, சுவிஸில் எடுக்கப்பட்டிருந்தால் நோர்வே தமிழ்ச் சங்கத்தினர் என்ன செய்திருப்பார்கள்? ISBN இலக்கமானது, வெளியீட்டு உரிமையை நிர்ணயிக்கும் தகைமை கொண்டதல்ல. அதன் பயன்பாடு அல்லது நோக்கம் வேறானது. நோர்வேயில் எனது நூலுக்காக ISBN வழங்கிய நிறுவனத்திடம், அதை நீக்கம் செய்யுமாறு கோரியிருக்கிறேன்.

நோர்வே தமிழ்ச் சங்கத்தின் பெயரை, எனது அறிமுக உரையிலே உள்ளடக்காமல் நன்றி தெரிவிக்கும் பகுதியிலே உள்ளடக்கியிருந்தேன். அறிமுக உரையிலும் பெயரை நுழைக்குமாறு சொல்லப்பட்ட பின்னர், அதை வலிந்து நுழைக்கவேண்டியிருந்தது. இந்த நூல் உருவாக்கத்தின் தொடக்கத்திலிருந்து இற்றைவரையான நடவடிக்கைகள் அனைத்துமே என்னிடம் பதிவுகளாக உள்ளன.

எனது நூலில் நான் உள்ளடக்கிய போர்க்கால ஒளிப்படங்கள் அனைத்தையும் நானே உருவாக்கியிருக்கிறேன் என்பதற்கான துல்லியமான ஆதாரங்களைக் கொண்டிருக்கிறேன். அந்தப் படங்களின் நம்பகத்தன்மையைப் ‘பரிசீலிக்க’ வேண்டுமெனில், நம்பகமான ‘பொறிமுறை’ அவசியம். சர்ச்சையில் சம்மந்தப்பட்ட தரப்புகளின் நேரடியான பங்கேற்பும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமும் அவசியம். எனது பெயரில் நான் முன்வைக்கும் ஒளிப்படங்கள் அனைத்தினதும் நம்பகத்தன்மையினை உறுதிப்படுத்தும் வல்லமை இல்லாமல், சர்வதேச மட்டங்களில் வெளிப்படையாக இயங்கிக்கொண்டிருக்க முடியுமா? எனக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் இடர்களையும் பொருட்படுத்தாமல் சுயாதீனமாக நான் இயங்கிக்கொண்டிருப்பது, எனது தனிப்பட்ட நலன்களுக்காக அல்ல. யார் என்ன சொன்னாலும் எவர் எனக்கு எதிராக நின்றாலும் எனது மனச்சாட்சிக்கு விரோதமின்றி, அறத்தின் வழியில் இயன்றவரை பயணிப்பேன். 

ஒரு சுயாதீன ஊடகராகவும் கலைஞராகவும் இருந்துகொண்டு, ஈழத்தமிழினத்தின் சார்பில் சுயாதீனமாக இயங்கிக்கொண்டிருக்கும் எனக்கு எதிராக இத்தனை நாடுகளில் இருந்து கிளம்பியிருக்கிறார்களா? அத்தகையவர்களில் யாராவது ஒருவர், தன்னிடம் உள்ளதாகச் சொல்லும் ‘ஆதாரங்களை’ எடுத்துக்கொண்டு நேரில் வந்து, நம்பகமான மூன்றாம் தரப்பின் முன்னிலையில் என்னுடன் இருந்து ‘அனைத்தையும்’ பரிசீலிக்கத் தாயாரா? இதுவரை, பொதுவெளியில் ‘எனக்கு எதிராக’ ஏவப்பட்ட அனைத்துக் கருத்துகளும் ஆதாரங்கள் அற்றவை. அவை, பல்வேறு உள்நோக்கங்களுடன் வலிந்து புனையப்படவை. எனவே, வதந்திகளாகவும் அவதூறுகளாகவுமே அவை பார்க்கப்படும். ‘என்னை’ நன்கு அறிந்திராத சிலரின், கண்ணியப் பிறழ்வான உளறல்களை நான் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. என்னை நேரில் சந்தித்து ‘அனைத்தையும்’ பரிசீலிக்கும் திராணி, இதுவரையிலே ‘சர்ச்சைகளில் சம்மந்தப்பட்ட’ யாருக்கும் வரவில்லை. அவசியமான தருணங்களிலே எனது எதிர்வினைகளைப் பொதுவெளியில் முன்வைத்துவிட்டு, நான் நிதானமாக எனது வழியிலே பயணித்துக்கொண்டிருக்கிறேன். கொடிய போரில் உழன்ற ஈழத்தமிழரின் அவலங்களை நான் சுமந்து கொண்டிருக்கிறேன்.

இரத்தமும் வியர்வையும் கண்ணீரும் சிந்தி நான் உருவாக்கிய எனது ஒளிப்படங்களை, ஈழத்தமிழர் சார்ந்து நானே வெளியிடும்போது, யாரும் ‘தடை’ போட முடியாது. நான், மிரட்டல்களுக்கும் அவதூறுகளுக்கும் பயந்தவனல்ல. நோர்வே தமிழ்ச் சங்க அறிக்கையிலே குறிப்பிட்டுள்ளபடி, என்னுடன் நேரில் பேசிய ‘மூத்த போராளிகள்’ யார்? அப்படி யாரும் இதுவரை என்னுடன் ஆக்கபூர்வமாகப் பேசியதில்லை. அவசியம் ஏற்பட்டால், எப்போதும் யாரும் என்னைச் சந்திக்க முடியும். யாரும் எதுபற்றியும் என்னுடன் பேச முடியும்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரிவொன்றிலே செயற்பட்ட ஒருவருடன் தொலைபேசியிலே முன்னர் உரையாடியிருக்கிறேன். எனது போர்க்கால ஒளிப்படங்கள் தொடர்பான அவசியமற்ற ‘சர்ச்சை’ தொடர்பிலான விளக்கங்களை அவருக்குத் தெளிவாக வலியுறுத்திச் சொல்லியிருந்தேன். எனது படங்கள் சிலவற்றை, அவர் ‘தன்னுடையதாக’ வைத்திருப்பதை அறிந்து, சில உண்மைகளை அவருக்கு உறுதிப்படுத்த நினைத்தேன். அவரிடமிருக்கும் படங்களைப் ‘பரிசீலிக்க’ அனுப்புமாறு கூறியிருந்தேன். ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கும் அவரை, நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்துமிருந்தேன். அவர், பிறகு என்னுடன் தொடர்புகொள்ளவில்லை. அவர், எனது நூலின் சர்ச்சையில் இப்போது சம்மந்தப்பட்டிருக்கிறார். நோர்வே தமிழ்ச் சங்கத்திற்குத் தவறான தரவுகளை வழங்கியிருக்கிறார். அவரது மோசடிகளை நான் அறிந்திருந்தும், அவரது பெயரைப் பொதுவெளியில் இதுவரை பயன்படுத்தியதில்லை. அவர் மீதான கரிசனத்தினால், அவரது மோசடிகளைப் பொதுவெளியில் இதுவரை அம்பலப்படுத்தாது பொறுமை காத்து வந்திருக்கிறேன். அவசியம் ஏற்பட்டால், அவருடனான எனது தொடர்பாடல் ஆதாரங்கள் மற்றும் ஏனைய ஆதாரங்கள் போன்றவற்றை முன்வைத்து அவரது தவறான நிலைப்பாடுகளையும் மோசடிகளையும் பொதுவெளியிலே அம்பலப்படுத்த முடியும். 

எனக்கெதிராக, சமூக வலைத்தளங்களில் அவதூறுகளைப் பரப்புகிற ஒருவர், அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். அவர், எனது ஒளிப்படங்கள் பலவற்றைச் சுவீகரித்து வைத்திருந்து, ‘தன்னுடையதாகப்’ பயன்படுத்தியிருக்கிறார். Trevor Grant என்ற அவுஸ்திரேலிய ஊடகரின் நூலொன்றுக்கென, என்னுடைய பல ஒளிப்படங்களைத் தன்னுடையதாகச் சொல்லி வழங்கியிருக்கிறார். பின்னர், Trevor Grant என்பவராலும் வேறு சிலராலும் அவரது மோசடி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. புலிகள் இயக்கத்தின் அதி தீவிர விசுவாசியாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் அவரது மோசடிகளை அம்பலப்படுத்தக்கூடிய ஆவணங்கள், ஆதாரங்கள் உள்ளன. சுயாதீனக் குழுவொன்றின் நீதி விசாரணைகளில் அல்லது சட்டரீதியான விசாரணைகளில் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியும்.

Trevor Grant எழுதிய நூலில் எனது ஒளிப்படங்கள் பல உள்ளன என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் உள்ளன. அவற்றை உரியமுறையிலே பரிசீலித்து உண்மைகளைக் கண்டடைய ‘யாரும்’ தயாராக இருக்கவில்லை. Trevor Grant இறந்துவிட்டமையால், சில விடயங்களைத் துல்லியமாக உறுதிப்படுத்துவதில் சிரமம் ஏற்படக்கூடும். எனினும், அவருடன் சேர்ந்து பணியாற்றிய வேறு சிலர் இப்போதும் உள்ளனர். அவர்களது கருத்துகள் கேட்கப்படவில்லை. எனது ஒளிப்படங்கள், சரியான முறையில் ஆராயப்படவேயில்லை. சர்ச்சையிலே சம்மந்தப்பட்ட தரப்பினரை என்னுடன் பேசவைக்காமல் (எனக்கு அனைத்தையும் மறைத்து), அவர்களது நியாயமற்ற கோரிக்கைகளுக்கு அடிபணிந்து, தன்னிச்சையாகவும் தவறான முறையிலும் ‘விசாரணைகளை’ மேற்கொண்டிருக்கிறது நோர்வே தமிழ்ச் சங்கம். அதற்கு, இந்த அறிக்கையே சாட்சியாக இருக்கிறது. அடாவடித்தனமான முறையிலே, ‘போலீஸ்’ வேலை செய்ய அல்லது ‘நீதிபதி’ வேலை செய்ய நோர்வே தமிழ்ச் சங்கம் முயன்று தோற்றிருக்கிறது. என்னுடன் எதையுமே கலந்துரையாடாமல், என்னை ஒதுக்கி வைத்துவிட்டு, எனக்கெதிராகச் செயற்படும் மோசடியாளர்களின் பின்னாலே இழுபட்டுத் தோற்றுப்போயிருக்கிறது நோர்வே தமிழ்ச் சங்கம்.

எனது பல ஒளிப்படங்கள் அந்த நூலில் இருக்கின்றன என்று, சில இடங்களிலே சொல்லியிருக்கிறேன். அந்த நுலாசிரியரிடம் நானே நேரடியாக அவற்றைக் கொடுத்திருப்பதாக நான் எங்குமே சொன்னதில்லை. பலரது கைகளில் மாறி மாறி, உருவாக்கியவர் யாரென்று தெரியாமலேயே எனது பல போர்க்கால ஒளிப்படங்கள் பல்வேறு தரப்பினராலும் கையாளப்பட்டுள்ளன. ‘சில காரணங்களால்’ எனது அடையாளங்களை மறைத்து, மக்களின் அவலங்கள் சார்ந்த பல ஒளிப்படங்களைப் போர்க்காலத்திலும் பின் போர்க்காலத்திலும் பலவழிமுறைகளில் வெளியிட்டிருக்கிறேன். எனது படங்களாக என்னால் உறுதிப்படுத்தக்கூடியதாக இருக்கும் படங்களையே எனது பெயருடன் தற்காலத்தில் நான் வெளியிட்டு வருகிறேன். எனது பெயர் தவிர்த்து, ஏற்கெனவே வெளியிடப்பட்டிருக்கும் எனது படங்களையும் இதுவரை வேறெங்கும் வெளியிடப்படாத எனது படங்களையும் இப்போது எனது பெயருடன் நான் வெளியிடுவதற்கான அவசியக் காரணங்கள் உள்ளன.

சர்வதேச மட்டங்களில், ஒரு ஆவணத்தின் உண்மைத்தன்மையானது அதை உருவாக்கியவரின் பின்னணியில் இருந்தும் உறுதிசெய்யப்படும். நேரடியான அல்லது துலக்கமான உரிமையாளரைக் கொண்டிராத, நம்பகத்தன்மை கொண்டிராத எந்த ஆவணமும் ‘சட்டரீதியான’ விசாரணைகளிலே செல்லுபடியாவது கடினம். ‘போர்க்குற்றம்’ அல்லது ‘மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்’ சார்ந்த நடவடிக்கைகளை வலியுறுத்தி, எனது ஆவணங்களையும் சாட்சியங்களையும் துலக்கமாக, ஆணித்தரமாக முன்வைக்க வேண்டியிருக்கிறது. போரிலே மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழிம் சார்பிலான சாட்சியங்களை, ஒரு சுயாதீன ஊடகராகவும் கலைஞராகவும் ஊடக அறத்தின் வழியிலேயே வழங்கிவருகிறேன். ஒரு தசாப்த காலத்துக்கு மேலாக, எனது ஒளிப்படங்களுடன் பல்வேறு தளங்களிலே பயணித்திருக்கிறேன்.

ஆவணப்படுத்தல் சார்ந்த செயற்பாடுகளை விடுதலைப் புலிகள் மேற்கொள்ளவில்லை என்று, நான் எந்த இடத்திலும் சொன்னதில்லை. அந்த இயக்கத்தையும் அதில் இருந்து செயற்பட்ட பலரையும் நான் அறிந்திருக்கிறேன். அந்த இயக்கத்துடன் எனக்கு நெருக்கமான தொடர்பு இருந்திருக்கிறது. எனினும், எத்தகைய சந்தர்ப்பத்திலும் அந்த இயக்கத்தின் பெயரை நான் எனது சுய தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டதில்லை. என்னைப் புலிகள் இயக்கத்தின் ‘எதிராளி’ போலக் காண்பிக்க முற்படும் நோர்வே தமிழ்ச் சங்கம், எனக்கு எதிரான வதந்திகளையும் அவதூறுகளையும் பரப்பித் திரிவோரின் வரிசையில் சேர்ந்துகொள்கிறதா?

‘ஒளிப்படங்களின் உரிமம் மீது சர்ச்சை இருக்கிறது’ என்னும் அர்த்தப்படும் குறிப்பினை எனது நூலில் இணைக்க, நோர்வே தமிழ்ச் சங்கம் முயல்வதை நான் ஏற்க முடியாது. எனது நூலின் ஒளிப்படங்கள் அனைத்துமே என்னுடையவை என்னும் அடிப்படையிலும், வருங்காலத்தில் எழக்கூடிய வரலாற்று மயக்கம் மற்றும் உரிமைச் சிக்கல்கள் போன்ற எதிர்மறை விளைவுகளைத் தடுக்கும் நல்லெண்ணத்தின் அடிப்படையிலும், அத்தகைய குறிப்பினை இணைக்க முயலும் கோரிக்கைக்கு நான் உடன்பட முடியாது.

நோர்வே தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் என்னுடன் அடாவடித்தனமாக நிகழ்த்திய மின்னஞ்சல் உரையாடல்கள் என்னிடம் உள்ளன. நிறுவன வன்முறை மற்றும் அறமீறல் குறித்து நான் பலமுறை எடுத்துரைத்தேன். எனது தீவிரமான பிரயத்தனத்தின் பின்னர், நோர்வே தமிழ்ச் சங்க அலுவலகத்தில் திரு. சிறி நவரட்ணம் ( நோர்வே தமிழ்ச் சங்கத் தலைவர்), திரு. சஞ்சயன் செல்வமாணிக்கம் (நோர்வே தமிழ்ச் சங்கச் செயலாளர்) ஆகியோர் மட்டுமே என்னைச் சந்தித்தார்கள். மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை நான் முன்னரே கேட்டிருந்தும் அதனை மறுத்திருந்தார்கள். எனது பயண ஒழுங்குகளை அவர்கள் ரத்துச் செய்திருந்த நிலையில், மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில், சொந்தச் செலவிலே நோர்வே சென்று அவர்களை நான் சந்திக்கவேண்டியிருந்தது. என்னை ஒதுக்கிவைத்து, அடாவடித்தனமாக எனது நூலிலே சில மாற்றங்கள் செய்து நூலை வெளியிடக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்தார்கள்.

அது ஒரு மோசமான சந்திப்பு. இணக்கமாகப் பேசி எதையும் பரிசீலிக்க அவர்கள் தயாராக இருக்கவில்லை. அவர்களுடன் நான் அன்று நிகழ்த்திய நேரடி உரையாடலை முழுமையாகப் பதிவு செய்தனர். சந்திப்பு முடிந்த பின்னர், அந்த ஒலிப்பதிவின் பிரதி எனக்குத் தரப்படுமென்று முன்னரே சொல்லப்பட்டிருந்தது. தவறான முன்முடிவுகளோடும் தமது வலையில் என்னை விழுந்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும் இருந்த அவர்களால், உண்மை சார்ந்த உரையாடலை முன்னெடுக்க முடியவில்லை. இடையிலேயே அவர்கள் உரையாடலை முறித்துக்கொண்டனர். அப்போது, உரையாடல் ஒலிப்பதிவின் பிரதியைத் தருமாறு கேட்டேன். இயலுமென்றால் அதைத் தருவதாகச் சொன்னதற்கான ஆதாரத்தை முன்வைக்குமாறு நோர்வே தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் அடாவடித்தனமாகச் சொன்னார். அவரது உடல் மொழியும் வார்த்தைகளும் கொடூரமானவையாக இருந்தன. அவரே, தான் விரும்பும் அல்லது எதிர்பார்க்கும் ஆதாரங்களை என்னிடம் மின்னஞ்சல் வழியாகக் கேட்டு என்னை நெருக்கடிக்குள்ளாக்கி முரண்பாட்டை வளர்த்துக்கொண்டிருந்தவர். எப்படிப்பட்ட ‘நீதிமான்’ அவர்? ஒலிப்பதிவின் பிரதி தரப்படாமல் வன்முறை வழியிலே வெளியேற்றப்பட்டேன். மிக மோசமான அச்சுறுத்தலுக்கு உள்ளானேன். மறுநாள், எனது நூல் வெளியிடப்பட இருந்தது. எனது முயற்சியாலும் நோர்வே வாழ் தமிழ்ச் சமூகத்தினர் சிலரின் முயற்சியாலும் அடாவடித்தனமாக நடாத்தப்பட இருந்த நூல் வெளியீட்டு நிகழ்வு தடுக்கப்பட்டது.

நூலின் உள்ளடக்கம் சார்ந்த எத்தகைய பிரச்சினைகளுக்கும் நான் முகம் கொடுக்கத் தயாராக இருக்கிறபோது, அதுபற்றிய சர்ச்சையில் சஞ்சயனோ நோர்வே தமிழ்ச் சங்கமோ ஏன் சிக்கிக்கொள்ள வேண்டும்? அடாவடித்தனமான ‘போலீஸ்’ பாத்திரம் எதற்கு? சர்ச்சைக்குரிய வேறு சிலரைத் தேடிச்சென்று நேரில் சந்தித்துவிட்டு, என்னை நேரில் சந்திப்பதையோ என்னுடன் தொலைபேசியில் உரையாடுவதையோ தவிர்த்துவிட்டு, தவறான முன்முடிவுகளைச் சஞ்சயன் எடுத்திருந்தார்.

உண்மை அறியும் நல்லெண்ணம் இருந்திருந்தால், நேர்மையுடனும் நிதானமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் அனைத்து விடயங்களையும் அணுகியிருக்க வேண்டும். என்னுடன் கண்ணியமாக உரையாடியிருக்க வேண்டும். ‘தலைமறைவாக’ இருந்துகொண்டு நயவஞ்சகமான கருத்துகளைத் திட்டமிட்டுப் பரப்புகிறவர்களின் பக்கம் சாய்ந்திருக்கிறது நோர்வே தமிழ்ச் சங்கம். என் மீது குற்றம் சாட்டிக்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் வசிப்பவர்கள் யாராவது, தம்மிடமிருப்பதாகச் சொல்லும் ‘ஆதாரங்களுடன்’ வந்து, அனைத்தையும் துல்லியமாகப் பரிசீலிக்க முயற்சிக்கலாமே. பகிரங்கமாக இத்தனை காரியங்களை மேற்கொள்ளும் எனக்கு மட்டும் ‘பாதுகாப்புப் பிரச்சினை’ இல்லையா என்ன? என் மீது ‘குற்றம்’ சாட்டுபவர்கள், அதை ஆதாரபூர்வமாக என்னிடம் நிரூபிக்க வேண்டும். என் மீது யாரும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் முடியும். நோர்வே தமிழ்ச் சங்க அறிக்கையில், ‘போராளிகள்’ என்ற சொல் அனுதாபத்தை ஏற்படுத்தும் வகையிலே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தச் சொல்லால் அடையாளப்படுத்தப்படுகிறவர்கள் யாரும் ஒளிப்படச் சர்ச்சை விடயத்தில் நேர்மையாகவோ உண்மையாகவோ நடந்துகொள்ளவில்லை. சர்ச்சையில் சம்மந்தப்பட்ட அவர்களது நோக்கம் நேர்மையானதாக இருந்திருந்தால், என்னை அவர்கள் ஒரு எதிராளியாகப் பார்த்திருக்க வேண்டியதில்லை. அவர்களுக்கு இருக்கக்கூடிய அத்தனை நெருக்கடிகளும் எனக்கும் இருக்கின்றன. ஆனால், எங்கேயும் பதுங்கிக்கொண்டு இருக்காமல், எவரது நிழலிலும் ஒதுங்கிக்கொள்ளாமல், மக்கள் நலன் சார்ந்து, விடுதலை அரசியல் உணர்வோடு ஒரு ‘போராளியாக’ இயங்கிக்கொண்டிருக்கிறேன். என்னால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்ற விளக்கத்தையும், நான் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்ற தெளிவையும் கொண்டிருக்கிறேன். எனது ‘அறக்கோபம்’, தமிழ்ச் சமூகத்தாலே புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

இரத்தமும் வியர்வையும் கண்ணீரும் சிந்தி, சுயாதீன ஊடகராக இருந்து நான் உருவாக்கிய போர்க்கால ஆவணங்களை, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயராலே சிலர் ‘பங்குபோட’ முயல்வது இழிவானது. அத்தகையவர்கள், அந்த இயக்கத்தையே கொச்சைப்படுத்துகிறார்கள். விடுதலைப் புலிகளின் ஆவணப்படுத்தல் சார்ந்த செயற்பாடுகளை நான் நன்கு அறிந்திருக்கிறேன். விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு, அந்த இயக்கத்தின் பிரிவுகளுக்கு எதிரானவனாக என்னைக் கட்டமைக்க விழைகிறார்கள். புலிகள் இயக்கத்திற்கும் எனக்கும் இடையிலிருந்த ‘உறவுநிலை’ அல்லது ‘ஊடாட்டம்’ பற்றி அறியாதவர்களின் வெற்றுக் கூச்சல்களை நான் பொருட்படுத்துவதில்லை. தனிப்பட்ட நலன் சார்ந்தோ மோசமான உள்நோக்கத்துடனோ புலிகள் இயக்கத்தின் பெயரை நான் பயன்படுத்திக்கொள்வதில்லை. புலிகள் இயக்கத்தின் அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகளை நான் திட்டமிட்டு அவதூறு செய்வதில்லை. அவசியமான இடங்களிலே, புலிகள் இயக்கத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டத் தயங்குவதும் இல்லை.

முன்னொரு காலத்திலே, விடுதலைப் புலிகளின் மகளிர் புகைப்படப் பிரிவினரின் வேண்டுகோளை ஏற்று, அவர்கள் மத்தியில் ஒளிப்படக்கலை தொடர்பில் பயிற்சிப்பட்டறைகள் நடத்தியிருக்கிறேன். (அவற்றிலே கலந்துகொண்ட சிலர் இப்போதும் இருக்கிறார்கள்.) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ‘மானுடத்தின் தமிழ்க் கூடல்’ நிகழ்விலே ஊடகவியல் சார் அமர்வில், ‘உலகளாவிய ரீதியிலும் ஈழப்போர்க் காலத்திலும் ஒளிப்படக் கலையின் இயங்கு நிலை’ என்னும் தலைப்பிலே கட்டுரை வாசித்திருக்கிறேன். அதில் விடுதலைப் புலிகளின் ஆவணப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்பிலான விடயங்களை விரிவாக்கப் பதிவுசெய்திருக்கிறேன். ஆக, விடுதலைப் போராட்டத்தில் புகைப்படப் பிரிவினரின் பங்களிப்பை நன்கு அறிந்தவன் நான். அந்தப் பிரிவில் இருந்தவர்கள், புலிகளின் வீர வரலாற்றையும் தியாக வரலாற்றையும் பதிவுசெய்திருக்கிறார்கள். ஒரு இயக்கத்தின், அதன் பிரிவுகளின் ‘நன்மதிப்பை’ நீர்த்துப்போகச் செய்யும் வகையில், ‘உதிரிகள்’ சிலரின் செயற்பாடுகள் அமைவது ஆபத்தானது. நேரில் என்னை எதிர்கொள்ளத் திராணியற்ற, நேரில் என்னுடன் எதையும் பரிசீலித்து விவாதிக்கத் தகுதியற்ற ‘உதிரிகள்’, இப்போது ஒன்றாகி நிறுவனமயப்படுவதாகத் தெரிகிறது.

விடுதலைப் புலிகளின் பிரிவுகளிலே செயற்பட்டவர்கள் என்று சொல்லிக்கொண்டு, எனக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறவர்கள் சிலரை நான் இப்போது இனங்காண்கிறேன். இப்போது, ஆங்காங்கே உதிரிகளாக இருந்துகொண்டு எனக்கு எதிரான நாசகார நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் நோக்கம் என்ன? ஈழத்தமிழரின் அவலங்களுக்குக் காரணமானோரின் நிகழ்ச்சி நிரலிலே அவர்கள் சிக்குண்டிருக்கிறார்களா? நான் பலமுறை பகிரங்கமாக அழைத்தும், ஒருவராவது என்னை நேரிலே சந்திக்காமல், மறைந்திருந்து புலம்பும் மர்மம் என்ன? 

என்னுடைய சில போர்க்கால ஒளிப்படங்கள் சர்ச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டதை ஏற்கெனவே சஞ்சயன் அறிந்திருந்தார். அவருடன் உரையாடும்போது, அவருக்கு நானே அதுபற்றிச் சொல்லியிருக்கிறேன். ‘சர்ச்சைக்குரியவர்களுடன்’ அவர் தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்ட பின்னர், அல்லது என்னுடன் நேரடியாக ‘முரண்பட்ட’ பின்னர், என்னைக் ‘குற்றவாளி’ போலச் சித்தரிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் மடத்தனமானவை. நோர்வே தமிழ்ச் சங்கத்தின் அறிக்கை உருவாக்கத்திலே முக்கிய பங்கெடுத்திருக்கக்கூடிய சஞ்சயன், தனது தவறுகளை மூடிமறைத்துத் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் நோர்வே தமிழ்ச் சங்கத்திலே தனது அதிகாரத்தைத் தக்கவைக்கவும் என்னைப் பற்றியோ எனது நூல் பற்றியோ திரிபுவாதங்களை முன்வைத்திருக்கிறார். அடிப்படை அறமற்ற அத்தகைய மோசடி முயற்சிகளை ஆதாரபூர்வமாக முறியடித்திருக்கிறேன். அவரது குளறுபடிகளையும் பொய்களையும் நிரூபிக்கும் வகையிலான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. தன்னை ஒரு நீதிமானாகக் காட்ட முற்பட்டுத் தோற்றுப்போயிருக்கிறார் என்பதை, அவர் இன்னும் உணரவில்லை என்று நினைக்கிறேன். அவசியம் கருதி நான் வெளியிட்டிருக்கும் சில ஆதாரங்களில் இருந்து அவரது தப்புத்தாளங்களை எவரும் புரிந்துகொள்ள முடியும். என்னிலிருந்து தன்னைத் தூரப்படுத்திக்கொண்ட அவருக்குக் காலம் பதில் சொல்லட்டும் என்று காத்திருக்கிறேன். எனது பக்க நியாயங்களை உற்றுக்கேட்கும் நிலையில் அவர் இப்போது இல்லை. எனக்கெதிராக அவர் மோசமான காரியங்களில் ஈடுபட்டிருந்தாலும், அவர் மீது நான் வன்மத்தை வெளிப்படுத்தியதில்லை. கண்ணுக்குத்தெரியாத ஒரு சதிவலையிலே சிக்குண்டிருக்கும் அவரை மீட்டெடுத்துவிட வேண்டும் என்ற நல்லெண்ணமே என்னுள் இருக்கிறது. அவரை என் அருகில் இருத்தி, அவரது தப்புத்தாளங்களை அவருக்கு ஆதாரபூர்வமாகத் தெரியப்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறது. அதற்கு அவர், அகங்காரத்தையும் (ego) தவறான முன்முடிவுகளையும் கைவிட்டு, தன்னைப் பக்குவப்படுத்திக்கொண்டு என்னைக் கண்ணியமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவரை மட்டுமல்ல, என்னைப் பற்றிய தவறான முன்முடிவுகள் கொண்டிருக்கக்கூடிய எவரையும் நான் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன். மனிதர்கள் தவறிழைப்பதும் உணர்ச்சிவசப்பட்டுத் தவறான முடிவுகளை அடைவதும் புரிந்துகொள்ளக்கூடியவை தான். ஆனால், அடுத்தவரை அல்லது சமூகத்தை மோசமாகப் பாதிக்கும் வகையிலே ஒருவர் தொடர்ந்து தவறிழைப்பது அனுமதிக்கப்பட முடியாதது. சிலர், தெரியாமலே தவறிழைக்கக்கூடும். சிலர், தெரிந்துகொண்டே திட்டமிட்டுத் தவறு செய்யக்கூடும். 

எனது ஒளிப்பட நூல் தொடர்பான சர்ச்சைகளுடன் தொடர்புடைய யாராவது நல்ல நோக்கத்துடனும் கண்ணியமாகவும் நேரடியாக என்னை அணுகினால், அவர்களுடன் எது பற்றியும் எப்போதும் உரையாடத் தயாராகவே இருக்கிறேன். 

நோர்வே தமிழ்ச் சங்கத்திற்கு 2019-10-23 அன்று நான் அனுப்பிய மின்னஞ்சலின் பகுதி, கீழே இணைக்கப்பட்டுள்ளது.

”உண்மை அறியும் வழிமுறை மிகவும் இலகுவாகவே இருக்கிறது. நீங்கள் வீணான சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். நெருக்கடியான காலகட்டத்தில் அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையிலே பரிமாறப்பட்டு, Trevor Grant தனது நூலில் பயன்படுத்திய எனது படங்களை, அவர் தற்போது உயிருடன் இல்லாத நிலையில் நீங்கள் உறுதிப்படுத்த விழைவது சரியான வழிமுறையாக இருக்க முடியாது. எனினும், அவரது நூலில் உள்ள எனது படங்களை நான்தான் பதிவுசெய்திருக்கிறேன் என்பதை என்னால் நேரில் வேறு சில தரவுகளுடன் உறுதிப்படுத்த முடியும் என்று தெளிவுபடுத்தியும் நீங்கள் கேட்கவில்லை. மின்னஞ்சலில் ஒருவர் இன்னொருவருக்குப் படங்களை அனுப்பிய ஆதாரத்தை மட்டும் கொண்டு, அனுப்பியவர் தான் அந்தப் படங்களைப் பதிவுசெய்தார் என்று எப்படி நியாயப்படுத்த முடியும்? நான் சொல்கிறேன், உலகின் எத்தகைய நிபுணத்துவம் வாய்ந்த ஒருவரின் முன்னிலையிலும் எனது நூலில் உள்ள ஒளிப்படங்கள் அனைத்தையும் நான் தான் பதிவுசெய்திருக்கிறேன் என்பதை நிரூபிக்க என்னால் முடியும்.உறுதிப்படுத்தல் தாமதமாகுமெனில், நூல் வெளியீட்டை நீங்கள் நிறுத்தியிருக்கலாம். அது, ஓரளவு புரிந்து கொள்ளக்கூடிய விடயமாக இருந்திருக்கும். மீறி நீங்கள் எனது நூலை நான் இல்லாமலும் தவறான குறிப்புடனும் வெளியிடுவது அறமேயில்லை. எனது படங்கள் அனைத்தையும் நான் பதிவாக்கியவை என்ற உறுதிப்படுத்தலை என்னால் நேரில் மட்டுமே செய்ய முடியும். அதுதான் சாத்தியமான, விஞ்ஞான பூர்வமான வழிமுறையாக இருக்கும். அதற்கான எனது கோரிக்கையை மறுத்திருக்கிறீர்கள். எனக்கு இருந்த அந்த வலிமையான வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளத் தவறியிருக்கிறீர்கள். உங்களை வெளியிலிருந்து யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள் அல்லது நீங்கள் வெளி அழுத்தங்களால் பதகளிப்பிற்கு உள்ளாகியிருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன்.

நான் கலந்துகொள்ளக்கூடிய சாதகமான சூழல் இருந்தும், நான் அழைக்கப்படாமல் எனது நூல் வெளியிடப்படுவது அறமேயல்ல. தவிர, நூலில் எனது கண்ணியத்தைச் சிதைக்கும் வகையிலான மேலதிகக் குறிப்புகள் உள்ளடக்கப்படுமானால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது. அதுபற்றிப் பொதுவெளியில், ஊடகங்களில் நான் விரிவாக ஆதாரங்களுடன் பேசவேண்டியிருக்கும். நூலின் வெளியீட்டு நிகழ்வு அறிவிக்கப்பட்ட நிலையில், நோர்வே தமிழ்ச் சங்கம் மேற்கொண்டிருக்கும் நிறுவன வன்முறையாகவே இதைப் பார்க்கிறேன். உங்கள் அவசரத்தனங்களும் அறமற்ற செயல்களும் நோர்வே தமிழ்ச் சங்கத்திற்கு வருங்காலத்தில் அபகீர்த்தியை ஏற்படுத்தும். நேரில் சந்தித்துச் சாட்சியமளிக்க எனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. நீங்களாகவே எனது ஒளிப்படங்களுக்கான உரிமம் தொடர்பிலான முடிவுகளை அறிவிக்கும் தகுதி உங்களுக்கில்லை. இந்தப் பிரச்சினையானது, பிற்காலத்தில் நிறுவன வன்முறைக்கு உதாரணமாகும்.

எனது இறுதிக் கோரிக்கையாக ஒன்றை முன்வைக்கிறேன். முன்னர் திட்டமிட்டிருந்தபடி, நூல் வெளியீட்டு நிகழ்விற்கு இன்னும் 3 நாட்கள் இருக்கின்றன. நீங்கள் என்னைச் சந்தித்து எனது சாட்சியங்களைப் பரிசீலிக்கும்வரை நூல் வெளியீட்டு நிகழ்வைப் பிற்போடுங்கள். அல்லது நூல் வெளியீட்டு முயற்சியில் இருந்து விலகிவிடுங்கள். THROUGH THE GREY ZONES – PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA’S WAR ZONES என்ற நூலின் அனைத்து உரிமைகளும் எனது பெயரிலேயே உள்ளன. (Publisher & Copyright owner : Wide Vision Studio, Amarathaas) அனுசரணையாளரான நீங்கள் நூலில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது. நூலின் அனைத்து விடயங்களுக்குமான பொறுப்புக்கூறும் அதிகாரத்தையும் தகைமையினையும் நான் கொண்டிருக்கிறேன்.”

நோர்வே தமிழ்ச் சங்க அறிக்கையின் பகுதி :

//அமரதாஸ் நோர்வேயில் தங்கியிருந்த காலத்தில் அல்லது அதன் பின் இன்று வரை, புத்தக வெளியீடு சம்பந்தமாக எதுவித உத்தியோகபூர்வமான தொடர்புகளையும் எம்முடன் மேற்கொள்ளவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 40 ஆண்டுகள் புலம்பெயர் சூழலில் பொதுப்பணியாற்றி வரும் நோர்வே தமிழ்ச்சங்கம் பொறுப்பற்ற முறையில் செயற்பட முடியாது. அது பொறுப்புடன் செயற்பட்ட காரணத்தினால் தான் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியுள்ளது.//

எனது கருத்து :

இது அப்பட்டமான பொய். நான் நோர்வேயில் இருந்து இரண்டு மின்னஞ்சல்களும் லண்டனில் இருந்து இந்த அறிக்கை தொடர்பாக ஒரு மின்னஞ்சலும் அனுப்பியிருக்கிறேன். அவற்றுக்கு இதுவரை பதிலளிக்கவேயில்லை. நோர்வே தமிழ்ச் சங்கத்தின் புறக்கணிப்பிற்குப் பின்னரும், எதற்கும் தயாரான நிலையிலே நோர்வேயில் ஒரு வார காலம் சொந்தச் செலவில் தங்கியிருந்தேன். பேசுவதற்கான வாய்ப்புகள் வழங்கியிருந்தேன். யாரும் பயன்படுத்திக்கொள்ளவில்லை. 40 ஆண்டுகள் புலம்பெயர் சூழலில் பொதுப்பணியாற்றி வரும் நோர்வே தமிழ்ச்சங்கம் பொறுப்பற்ற முறையில் செயற்பட முடியாது தான். இனியாவது பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

நோர்வே தமிழ்ச் சங்க அறிக்கையின் பகுதி :

// இப்பொழுதும் நோர்வே தமிழ்ச்சங்கமானது இந்த விடயத்தை உரிய முறையில் தீர்த்து வைப்பதற்கான முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளது. இதற்காக நாம் ISBN பதிவுக்கான அலுவலகம் மற்றும் இத்திட்டத்திற்கு உதவி வழங்கிய நிறுவனம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டோம். அவர்களிடம் இருந்து நேற்றுக் கிடைத்திருக்கும் பதிலின் அடிப்படையில் இதற்குப் பின்வரும் தீர்மானங்களை எட்டியுள்ளோம்.

1. நாமே இன் நூலின் தயாரிப்பாளர்/ வெளியீட்டாளர் என்ற பதிவு நோர்வே ISBN பதிவகத்தில் ஏற்கனவே உள்ளதால் இதனை குறிக்கும் ஒரு குறிப்பினை நாம் புத்தகத்தில் புதிதாக இணைக்கலாம் என்பதற்கு எமக்கு அனுமதி கிடைத்திருக்கின்றது. எனவே இது புதிதாக நூலில் இணைக்கப்படும்.

2. இந்த நூலின் தயாரிப்பாளர்/வெளியீட்டாளர் ஆகிய நாம் புகைப்படங்கள் பற்றிய சர்ச்சை உண்டு என்பதை வாசகர்களுக்கு அறிவிக்கும் தார்மீகக் கடமை உண்டு என்பதால், “இந்த நூலில் உள்ள புகைப்படங்களின் உரிமம் மீது சர்ச்சை உண்டு என்பதை வாசகர்களுக்கு அறியத் தருகிறோம்” என்னும் குறிப்பையும் இணைத்து இந்நூல் வெளியிடப்படும். நூல் வெளியீட்டிற்கு கலந்து கொள்வதற்கு அமரதாஸிற்கு அழைப்பு விடப்படும்.

3. இந்தப் புகைப்படங்கள் சர்சசைக்குரியன என்று தெரிந்து கொண்டே அதை வேண்டுமென்றே மறைத்துத் தமிழ்ச் சங்கத்திற்கு பலத்த நெருக்கடியை ஏற்படுத்தியதுடன் அதன் மூலம் ஏற்பட்ட சிரமங்களுக்கும் அபகீர்த்திக்குமான பொறுப்பினை அமரதாஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இவற்றை அமரதாஸை நோக்கியும் பொது வெளியை நோக்கியும் நோர்வே தமிழ்ச் சங்கம் முன்வைக்க வேண்டிய சூழலை முதலில் உருவாக்கியது அமரதாஸே. அவருடன் இணைந்து தொடர்ந்து உள் விவகாரங்களையும் நியாயத் தன்மைகளையும் அறிந்து கொள்ளத் தவறி, எமது கருத்துக்களை அறிவதற்கு சற்றேனும் ஆர்வம் காண்பிக்காது, அமரதாஸின் நியாயமற்ற கூற்றுக்களின் பின்னர் தங்களை செலுத்த முற்பட்டோரும் இதற்குக் காரணமாக இருக்கின்றனர்.

இந்த நிலையில், தவிர்க்க முடியாதவாறு, நோர்வே தமிழ்ச் சங்கம் இது தொடர்பாக என்ன நடந்தது என்பதை இன்று பொது வெளியில் கூறவேண்டிய அவசியத்தின் அடிப்படையில் இவ் அறிக்கை வெளியாகிறது.

இது நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 40 ஆண்டுகால வரலாற்றில் மிகுந்த வருத்தத்திற்குரிய விடயமே. இனிவரும் காலத்தில் இதுபோன்ற சிக்கலான விடயங்களில் நாம் மிகவும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த நூலானது அவசியமாக ஆவணப்படுத்தப்பட வேண்டியது என்பது எமது வரலாற்றுக் கடமையாகும்.

 
நிர்வாகம் 2019
நோர்வே தமிழ்ச் சங்கம்
07.11.2019 //
 
எனது கருத்து :
 
ஒளிப்படங்கள் தொடர்பில் ஏற்கெனவே சர்ச்சை இருந்ததை நான் வேண்டுமென்றே மறைத்ததாக அறிக்கையிலே சொல்லியிருப்பது அப்பட்டமான பொய்யாகும். சர்ச்சை குறித்து, தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக இருக்கும் சஞ்சயனுக்கு நான் ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறேன். என்னைப் பற்றிய அவதூறுகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் அவ்வப்போது பொதுவெளியிலே எதிர்வினையாற்றி வந்திருக்கிறேன். பின்னர், நோர்வேயில் நூல் வெளியீட்டு நிகழ்வு திட்டமிடப்பட்ட நிலையிலே சர்ச்சை எழுந்தபோது, என்னை அழைத்து அதுகுறித்து மேலோட்டமாகச் சொல்லியிருந்தார். பிறகு, சர்ச்சையாளர்களுடன் தொடர்புகளை வலுப்படுத்தினார். அவர்களிலே சிலரைச் சந்தித்து, அவர்களது சதிவலையில் விழுந்து, மோசமான நடவடிக்கைகளில் ஈடுபடத்தொடங்கினார். சர்ச்சையாளர்களின் முறைப்பாடுகளை என்னிடம் காண்பிக்காமல், என்னைச் சந்தித்துப் போதிய விளக்கங்களைப் பெற்றுக்கொள்ளாமல், அடாவடித்தனமாக நடந்துகொண்டார். அவரது நடவடிக்கைகள் அனைத்துமே விசித்திரமானவையாக இருந்தன.
 
எனது நூல் பற்றிய மோசடியான விளம்பரங்களை, நோர்வே தமிழ்ச் சங்கத்தின் ‘சங்கமம்’ மாணிக்க விழா மலரிலே நயவஞ்சகமாக உள்ளிட்டிருக்கிறார் சஞ்சயன். விடுதலைப் புலிகளின் படங்களும் எனது நூலில் இருப்பதாகச் சொல்லும் மோசடியான, பொய்யான விளம்பரங்கள் அவை. விளம்பரங்களில், நூலின் ISBN இலக்கத்தையும் ‘விசித்திரமாக’ இணைத்திருந்தார். மாணிக்க மலரின் முற் தயாரிப்பு வேலைகள் முடிவடைந்திருந்த நிலையில், மோசடியான விளம்பரங்கள் தந்திரமாக உட்செருகப்பட்டிருக்கின்றன. மலர் வெளியிடப்படும் வரை, மலர்க்குழுவினருக்கும் இந்த மோசடி பற்றித் தெரிந்திருக்கவில்லை. மோசடியான, கண்ணியமற்ற அந்த விளம்பரங்களைத் திரும்பப்பெற வேண்டுமென்று வலியுறுத்தி, அப்போது தமிழ்ச் சங்கத்திற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அதற்குப் பதில் வரவேயில்லை. நடந்த மோசடிக்குப் பரிகாரமான நீதி நடவடிக்கை எதுவும், இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. நோர்வே தமிழ்ச் சங்கத்தின் இத்தகைய மோசடிகள், அப்பட்டமான அறமீறல்களாகும். மட்டுமல்ல, சட்டவிரோதமானவையுமாகும்.
 
எனது நூலில் ‘மாற்றம்’ செய்து, என்னைப் புறமொதுக்கிவிட்டு, மாணிக்க விழாவின் இரண்டாம் நாள் நிகழ்விலே விடுதலைப் புலிகளின் படங்கள் கொண்ட நூலாக வெளியிடப்போவதாகச் சவால் விட்டிருந்தார் சஞ்சயன். தவறான குறிப்புரையுடன், மோசடியான முறையிலே எனது நூல் வெளிவரக்கூடாது என்று நான் கடுமையாக எதிர்த்தேன். நோர்வே தமிழ்ச் சங்கத்தினர் மற்றும் சஞ்சயனுடைய அறமற்ற அடாவடித்தனங்களை அறிந்த நோர்வே வாழ் தமிழர்கள் சிலர், எனக்குப் பக்கபலமாக இருந்தனர். கடும் எதிர்ப்பின் மூலம், எனது நூல் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டது.
 
நோர்வே தமிழ்ச் சங்கத்திற்கு ஏற்பட்டிருக்கும் அபகீர்த்திக்கும் சிரமங்களுக்கும், அதில் ஈடுபடும் சிலரின் மோசமான நடத்தைகளே முக்கிய காரணங்களாகும். ஒரு கலைஞராகவும் சுயாதீன ஊடகராகவும் இயங்கும் என்னை, அந்த நிறுவனம் மோசமாக அலைக்கழித்திருக்கிறது. இதுவரையான எனது செலவுகளை அவர்களே பொறுப்பெடுக்க வேண்டும். எனக்கான மன உளைச்சலுக்கும் மான நஷ்டத்துக்கும் அந்த நிறுவனமே பொறுப்புக்கூற வேண்டும். பல வகைகளில் என்னை மோசமாக நடத்தியிருக்கிறது. என்னுடன் ஒரு ஒப்பந்தத்தைச் செய்துவிட்டு, எந்தவிதமான பொறுப்புணர்ச்சியுமில்லாமல் அதையே மீறியிருக்கிறது. நோர்வே தமிழ்ச் சங்கமானது, மோசமான மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருக்கிறது. 
 
எனது நூலில் வேறு யாருடைய படங்களும் உள்ளடக்கப்படவில்லை என்பதைத் தொடர்ச்சியாகச் சொல்லி வருகிறேன். எனது படங்கள் மற்றும் அவற்றின் பின்னணி நினைவுகள் அனைத்தையுமே நான் சுமந்துகொண்டிருக்கிறேன். நூலில் உள்ள படங்கள் தொடர்பான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், அதை எதிர்கொள்ளும் வகையில் என்னிடம் முழுமையான ஆதாரங்கள் உள்ளன. ஆக, நான் யாருக்கும் எதற்கும் அஞ்சவில்லை. எனது இன மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான சாட்சியங்களாக அமையக்கூடிய எனது ஒளிப்படங்களின் ‘ஆவணப்படுத்தல்’ தாமதமாவது தான் வருத்தத்திற்குரியது. இறுதிப்போர் முடிந்து பத்து வருட நிறைவில் இந்த நூல் வரவேண்டும் என்பது எனது விருப்பாக இருந்தது. அதை நூலிலும் குறிப்பிட்டிருக்கிறேன். 
 
எனது நூலிலே பிறரின் படங்கள் ஒன்று கூட இல்லை என்று, திட்டவட்டமாகச் சொல்கிறேன். ஒன்றில் சந்தேகப்படுவது வேறு, ஒன்றை முடிந்த முடிவாகச் சொல்வது வேறு. சந்தேகத்தை எவராவது கொண்டிருக்கலாம். அது, அவரவர் மனநிலைகளைப் பொறுத்தது. குற்றச்சாட்டை அறுதியாக நிரூபிக்கக்கூடிய, என்னுடன் நேரில் இருந்து தர்க்கபூர்வமாகவும் ஆதாரபூர்வமாகவும் விவாதிக்கக்கூடிய ‘தகைமை’ யாருக்குமில்லை. எனது படங்கள் சிலவற்றைத் ‘தம்முடையவை’ என்று சொல்லிக்கொண்டு, அவற்றுக்கான ‘டிஜிற்றல் பிரதிகளை’ வைத்திருப்பவர் எவரும் என்னை இதுவரை நேரில் சந்திக்கவில்லை.
 
பேரவலங்களுடன் முடிவிற்கு வந்த இறுதிப் போரில் உழன்று, அப்பாவி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான ‘பாரபட்சமற்ற சாட்சியாக’ இருந்து வருகிறேன். போர் சார்ந்த குற்றங்களோடு நேரடியாகச் சம்மந்தப்பட்டவர்களுக்கும், போர்க்காலத்தின் உண்மைகளைத் திரிக்கவோ மறைக்கவோ முற்படுகிறவர்களுக்கும் எனது சுயாதீன நடவடிக்கைகள் உவப்பானவையாக இருக்கப்போவதில்லை. எனது குரலை நசிக்கவும், மக்கள் தரப்பிலிருந்து என்னால் உருவாக்கப்பட்ட போர்க்கால ஒளிப்பட ஆதாரங்களின் நம்பகத்தன்மையைச் சிதைக்கவும் முற்படுகிறவர்களை, ஈழத்தமிழினத்தின் விரோதிகளாகவே பார்க்க முடியும். அத்தகையவர்கள், குற்றங்களோடு சம்மந்தப்பட்ட அதிகாரம் மிக்க தரப்புகளின் ஆபத்தான நிகழ்ச்சி நிரல்களிலே சேர்ந்திருக்கக்கூடும். என்னைக் குறிவைத்து, பொதுவெளியிலும் மறைமுகமாகவும் வெளிப்படுத்தப்படுகிற வதந்திகளும் வன்மமும் பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவிக்கக் கூடியவை.
 
இது, அமரதாஸ் என்னும் தனிமனிதருக்கு மட்டுமான தனிப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல. போரிலே மோசமாகப் பாதிக்கப்பட்டு, நீதி மறுக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழினம் சார்ந்த சாட்சிய ஆவணங்களுக்கு எதிரான பிரச்சினையுமாகும். இதைப் பக்குவமாகவும் பாரபட்சமின்றியும் அணுக வேண்டிய தார்மீகப் பொறுப்பு, ஊடகங்களுக்கும் தமிழ்ச் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் இருக்கிறது.
 
ஆயுள் முழுதும் தொடரக்கூடிய போர்க்கால மனவடுக்களுடன் ‘நாடற்ற அகதியாக’ ஐரோப்பிய நாடொன்றில் வாழ்ந்துகொண்டிருக்கும் நான், நிறுவன பலத்தையோ அரசியல் அதிகாரத்தையோ பலமான பொருளாதாரப் பின்னணியையோ கொண்டிருக்கவில்லை. போர்க்காலத்தின் காயங்களால் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தும், ‘பொது வாழ்வில்’ இருந்து ஒதுங்கிக்கொள்ளாமல் சுயாதீனமாக இயன்றவரை பயணித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு எதிரான ‘நயவஞ்சக நடவடிக்கைகளை’ அறவழியில் எதிர்கொள்ளும் ‘ஓர்மம்’ கொண்டிருக்கிறேன். எனது பணிகளின் பிரதிபலனாக, விருதுகளையோ பொருளாதார நலன்களையோ புகழையோ நான் எதிர்பார்த்திருக்கவில்லை. என்னால் உடன்பட முடியாத அதிகாரம் மிக்க தரப்புகளின் நிழல்களிலே நான் ஒதுங்கப்போவதில்லை. எனது நிலைப்பாடுகளைப் புரிந்துகொண்டு, என்னுடன் இணைந்து ஆக்கபூர்வமான காரியங்களில் ஈடுபட விரும்புகிறவர்களோடு எது குறித்தும் கலந்துரையாடத் தயாரான நிலையில் இருக்கிறேன்.
 
சர்ச்சைக்குக் காரணமானவர்கள் மற்றும் அதை மேலும் சிக்கலாக்கியவர்கள் யாரும், என்னை நேரில் சந்திக்கவோ என்னுடன் வெளிப்படையாக உரையாடவோ சர்ச்சையினை நாகரிகமாக முடிவிற்குக் கொண்டுவரவோ முன்வரவில்லை. அவர்கள், ‘மறைவாக’ இருந்து ‘எதிர்ப்பிரச்சாரங்களை’ மேற்கொண்டு எனக்கெதிரான அணிதிரட்டலை மேற்கொள்கிறார்கள் என்றும், எனது கண்ணியத்தைச் சீர்குலைக்கும் நோக்கில் வதந்திகளைப் பரப்புகிறார்கள் என்றும் அறியமுடிகிறது. அவர்கள், எப்போதாவது எனக்கெதிரான சாட்சியங்களை ‘வலிந்து தயாரித்துக்கொண்டு’ வெளிப்படக்கூடும். எதிர்த்தரப்பாக இணைந்து நிற்கிறவர்களைப் பரிசீலனைக்கென நான் நேரில் அழைப்பது, அவர்கள் வரமாட்டார்கள் என்ற நம்பிக்கையினால் அல்ல. தப்பபிப்பிராயங்களுடனோ பொறாமைகளுடனோ அவர்கள் புளுங்கிக்கிடப்பவர்கள் எனில், அவர்களுக்கும் ‘உலகுக்கும்’ உண்மைகளை ஆதாரபூர்வமாக எடுத்துரைக்க வேண்டும். முடிந்தால், அவர்களது தவறான நிலைப்பாடுகளைத் திருத்தி நட்புக்கொள்ளலாம். மோசமான உள்நோக்கங்களுடனும் வஞ்சகமான தந்திரங்களுடனும் எவரும் எப்போதாயினும் வரக்கூடும். வருவது வரட்டும். எப்போதும் எவரையும் எதிர்கொள்ளும் திராணியுடன், அறவழியில் எனது பயணத்தைத் தொடர்கிறேன்.
 
எவரையும் ‘தனிப்பட்ட முறையிலே’ பகைத்துக்கொள்ள விரும்பாத, எதிலும் பாரபட்சமற்ற மனநிலை கொண்ட, அன்பையும் நட்பையும் அவாவுகிற எனக்கு, ‘பகைவர்கள்’ தோன்றுவது வருத்தத்திற்குரியது தான். ஈழத்தமிழ் மக்களின் போர்க்காலப் பாடுகளைக் கண்டு, அவர்களோடு கூட இருந்து கண்ணீரும் வியர்வையும் இரத்தமும் சிந்தி, எப்படியோ தப்பிப்பிழைத்து போர்க்கால நினைவுகளுடன் போராடிக்கொண்டிருக்கும் நான், சுயாதீன நிலைப்பாடுகளில் இருந்தும் மக்கள் தரப்பிலிருந்தும் எப்போதும் நீங்கப்போவதில்லை. கொடிய போருக்குள் சிக்கிச்சிதைந்த நான், செத்துப்போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஈழத்தமிழினம் சார்ந்து, ‘என் பங்கிற்கு’ நான் செய்யவேண்டியிருந்த காரியங்களை வேறு யாராலும் செய்திருக்கவே முடியாது. எனக்கான துயரங்களைச் சுமந்து, எனக்கான தடைகளைக் கடந்து, எனக்கான பணிகளை நான் செய்தாக வேண்டும். எனக்கு யாரும் உதவி செய்யவில்லையெனினும் உபத்திரவம் செய்யாதிருங்கள்.
 
எனது விடயங்களிலே அறமற்ற வகையிலும் அராஜகமாகவும் நோர்வே தமிழ்ச் சங்கம் நடந்துகொண்ட சந்தர்ப்பங்களில், மனிதாபிமான உணர்வுடன் எனக்கு ஆதரவளித்து உதவிய நண்பர்களுக்கும் எனது தரப்பு நியாயங்களைப் புரிந்துகொண்டு பேசியவர்களுக்கும் நான் வாழும் காலம் முழுமைக்கும் நன்றியுடையவனாக இருப்பேன். ஆனால், சில நண்பர்களினதும் தமிழ்ச் சமூகச் செயற்பாட்டாளர்களதும் ஊடகங்களதும் ‘கள்ள மௌனம்’, வருத்தத்தைத் தருகிறது. சிலரது முன்முடிவுகளும் தவறான கருத்துப் பரிமாற்றங்களும், எனக்கெதிராக உருவாக்கப்பட்ட சர்ச்சையினை மேலும் சிக்கலடையச் செய்திருப்பதாகத் தோன்றுகிறது. உண்மை அறியும் நம்பகமான பொறிமுறையினை உருவாக்கவும், நோர்வே தமிழ்ச் சங்கத்தின் நிறுவன வன்முறை சார் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தவும், மறைக்கப்படுகிற உண்மைகளையும் இட்டுக்கட்டப்பட்ட பொய்களையும் வெளிக்கொண்டுவந்து நீதியை நிலைநாட்டவும் முன்வருமாறு ஊடகங்களையும் நண்பர்களையும் கேட்டுக்கொள்கிறேன். உண்மை அறியும் நல்லெண்ணத்துடன், யாரும் என்னுடன் உரையாட முடியும்.
 
எனது நூல் விடயத்திலே ஒப்பந்தத்தினை மீறித் தவறாக நடந்துகொண்டமைக்காகவும், என்னை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியமைக்காகவும், எனக்கு அபகீர்த்தியையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தும் வகையிலான அறிக்கையினைத் தவறான தகவல்களுடன் வெளியிட்டமைக்காகவும், நோர்வே தமிழ்ச் சங்கம் பொது மன்னிப்புக் கோர வேண்டும்.
 
எனது நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து, சுமுகமாக எனது நூலை வெளிக்கொண்டு வருவதற்கு நோர்வே தமிழ்ச் சங்கம் விரைந்து ஒத்துழைக்க வேண்டும். இல்லையெனில், நோர்வே தமிழ்ச் சங்கத்தின் அனுசரணை இல்லாமலே, வருங்காலத்தில் எனது நூல் வெளிக்கொண்டு வரப்படும்.
 
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் அறிக்கையினைப் பகுதிபகுதியாக மேலே பயன்படுத்தியிருக்கிறேன். அவற்றை ஒன்றாக்கினால், அறிக்கையின் முழு வடிவம் கிடைக்கும். ஒரு ஆவணப்படுத்தலுக்காகவே இப்படிச் செய்திருக்கிறேன். எனது கண்ணியத்தைச் சிதைக்கும் வகையிலே அந்த அறிக்கை அமைந்திருந்தாலும், எந்தவிதமான மாற்றமும் செய்யாமல் முழுமையாகப் பயன்படுத்தியிருக்கிறேன். பிற்காலத்தில், சட்ட நடவடிக்கை ஏதாவது மேற்கொள்ளப்படுமாயின், நோர்வே தமிழ்ச் சங்கத்தின் ‘குறைபாடான’ மோசடி அறிக்கையும் எனக்கு ஆதாரமாகக்கூடும். தேவை ஏற்படின், எனது மறுப்பறிக்கையிலே மேலதிக உள்ளீடுகள் மற்றும் சில ஆதாரங்கள் பின்னர் இணைக்கப்படலாம். எனது ஒளிப்பட நூல் உருவாக்கத்தின் ஆரம்ப காலத்திலிருந்து இற்றைவரை நடந்திருப்பவை அனைத்துக்குமான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.
 
‘சங்கமம்’ மாணிக்க மலரில் நடந்திருக்கும் விளம்பர மோசடி தொடர்பில், நோர்வே தமிழ்ச் சங்கத்திற்கு 2019-10-31 அன்று நான் உத்தியோகபூர்வமாக அனுப்பியிருந்த மின்னஞ்சலின் முக்கிய பகுதிகளைக் கீழே இணைத்துவிட்டிருக்கிறேன்.
 
// மோசடியான விளம்பரக் குறிப்புகள், நோர்வே தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள ‘சங்கமம்’ மாணிக்க மலர் – 2019 இல், இரண்டு இடங்களில் (85 ஆம் பக்கம் மற்றும் 109 ஆம் பக்கம்) பதிவாகியுள்ளன. அவற்றில், ‘விடுதலைப் புலிகளின் நிழற்படப் பிரிவினரால் பதிவுசெய்யப்பட்ட நிழற்படங்களும் உள்ளடங்கியிருக்கின்றன’ என்ற தகவல் பிழையானது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். எனது படங்களைத் தவிர வேறு யாருடைய படங்களும் எனது நூலில் இல்லை என்பதை ஆணித்தரமாக நான் சொல்லியிருந்தும், நோர்வே தமிழ்ச் சங்கம் இந்த அத்துமீறலைச் செய்திருக்கிறது. 
 
எனது புத்தகத்தில், எனது சொந்தப் படைப்புகள் மட்டுமே உள்ளன என்று நான் நோர்வே தமிழ்ச் சங்கத்திற்கு மீளவும் உறுதியளிக்கிறேன். நோர்வே தமிழ்ச் சங்கத்தின் தன்னிச்சையான, அடாவடித்தனமான நடவடிக்கைகளின் விளைவாக, எனது நூல் இன்னமும் வெளியிடப்படவில்லை. ஆனால், நோர்வே தமிழ்ச் சங்கத்தின் மலரிலே வெளியிடப்பட்டுவிட்டதாக விளம்பரக் குறிப்புகள் இடம்பெற்றிருப்பது முரண்பாடானது. உடனடியாக அந்த விளம்பரக் குறிப்புகளை நீங்கள் திரும்பப்பெற வேண்டும். என்னுடன் கலந்தாலோசிக்காமல், என்னை இணைத்துக்கொள்ளாமல் எனது நூலை வெளியிடும் உரிமையோ தகுதியோ அறமோ உங்களுக்கு இல்லை. //
 
எனது நூலிலே பயன்படுத்திய எனது அறிமுகவுரையின் பகுதியொன்றைக் கீழே இணைத்துவிட்டிருக்கிறேன்.
 
”பல்வேறு இன மற்றும் கலாச்சாரப் பின்னணிகள் கொண்டிருக்கக்கூடிய அனைத்து விதமான சர்வதேசப் பார்வையாளர்களுக்குமானதாக இந்த ஒளிப்பட நூல் அமைந்திருக்கிறது. போரிலே மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் புரிந்துகொள்ளுமாறு எல்லோரிடமும் வேண்டுகிறேன். இது, இலங்கையின் உள்நாட்டுப் போர் சார்ந்த அனைத்து உண்மைகளையும் தரவுகளையும் கொண்ட முழுமையான வரலாற்று நூல் அல்ல. பலவகையான உணர்வுத் தாக்கங்களையும் பல்வேறு விதமான அனுபவங்களையும் சுய தேடல்களையும் சுய சிந்தனைகளையும் பார்வையாளர்கள் மத்தியில் தோற்றுவிக்கும் நூலாக, இது அமைந்திருக்கும். ஈழத்தமிழினத்தின் மிக முக்கியமான ஆவணமாக, சொத்தாக இந்த ஒளிப்பட நூல் இருக்கும் என்று திடமாக நம்புகிறேன். ஒரு பெரும் வரலாற்றுக் கடமையை நிறைவுசெய்திருப்பதாக உணர்கிறேன்.”
 
அமரதாஸ், Wide Vision Studio
2019-11-12