இங்கிலாந்து நாட்டில் ஒளிப்பட நூல் வெளியீட்டு நிகழ்வு

நீண்டகாலமாக இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போரின் முடிவாக அமைந்த ‘இலங்கை இறுதிப் போர்’ சார்ந்த மறைக்கப்பட்ட உண்மைகளையும் ஈழத்தமிழரது போர்க்கால வாழ்வியலின் பரிமாணங்களையும் போர் சார்ந்த பேரவலங்களையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘THROUGH THE FIRE ZONES: PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA’S WAR ZONES’ என்னும் ஒளிப்படப் பெருநூலின் வெளியீட்டு நிகழ்வு, இங்கிலாந்து நாட்டில் நடைபெறவுள்ளது.
இடம்: Harrow Baptist Church, College Rd, Harrow HA1 1BA (Nearest tube station – Harrow on the hill) London.
காலம்: சனிக்கிழமை 22/10/2022 மாலை 4.00 மணி
இந்த ஒளிப்பட நூலில் இடம்பெற்றுள்ள சுய உருவ ஒளிப்படம் ஒன்றைப் பற்றிய குறிப்பு: இலங்கை இறுதிப் போரின் இறுதி நாட்களில், எனது பிரதான கமெராவில் உருவாக்கப்பட்ட சுய உருவப்படங்களில் ஒன்று இது. (‘wartime self portrait’ அல்லது ‘war selfi’ என்று குறிப்பிடலாம்.)
2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில், வலையன்மடம் என்னும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த எனது கொட்டகை குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. அப்போது நானும் எனது நெருங்கிய உறவினர்களும் காயங்களுடன் உயிர் பிழைக்க நேர்ந்தது. பின்னர், முள்ளிவாய்க்கால் நோக்கி நகரும்போது இந்தச் சுய உருவப்படத்தை உருவாக்கியிருந்தேன்.
கொடிய போர்க்காலத்தை ஊடுருவும் கண்களிற் படிந்திருக்கும் ‘ஓர்மம்’ குறைவதாயில்லை இன்னும்.
எனது காமெராவைக் கையில் வைத்திருந்து என் முகத்தை நோக்கித் திருப்பி, ‘selfi’ ஒளிப்படமாக இதனை உருவாக்கினேன். (அக் காலத்தில், ‘selfi’ என்னும் பதம் புழக்கத்தில் இருக்கவில்லை.) காமெராவைக் கையில் வைத்திருக்காமல், நிறுத்தியில் வைத்து ‘self timer’ முறையிலோ வேறு நபர்களின் உதவியுடனோ சுய உருவ ஒளிப்படங்களை உருவாக்க முடியும். இத்தகைய ஒளிப்படங்கள் சிலவும், ‘ஆவண முக்கியத்துவம்’ கருதி எனது ஒளிப்பட நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
2022-10-19
அமரதாஸ்