பிரபாகரன் தியாகச்சாவு எப்போது?

 
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் திரு. பிரபாகரன், ‘தியாகச்சாவு’ அடைந்த திகதி தொடர்பாக மாறுபட்ட கருத்துகள், தகவல்கள் நீண்டகாலமாக உலாவுகின்றன. இந்த விடயம் தொடர்பான தகவல்களையும் ஆதாரங்களையும் இயன்றவரை சேகரித்து ஆய்வு செய்து, நிகழ்தகவுகளின் அடிப்படையில் ஒரு நம்பகமான உண்மையைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே கண்டடைய முடிந்தது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி (காலை), பிரபாகரனின் தியாகச்சாவு நிகழ்ந்திருக்கிறது என்பதே அந்த உண்மை. இது பற்றி ஏற்கெனவே கட்டுரைகளில் எழுதியிருக்கிறேன்; பலருடன் உரையாடியிருக்கிறேன். 
 
2009 மே மாதம் 19 ஆம் திகதி பதிவாகியிருக்கும் பிரபாகரனின் உடல் சார்ந்த அரிதான சில ஒளிப்படங்களும், அப்போது இலங்கை இறுதிப் போரில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளில் ஒருவரான திரு. கமால் குணரட்ன எழுதிய நூல் ஒன்றின் தகவல்களும் வேறு சிலரின் வாக்குமூலங்களும் எனது அனுபவங்களும் ஆய்விற்குப் பயன்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. (போரில் ஒரு தரப்பாக இருந்த இராணுவ அதிகாரி எழுதிய விடயங்கள் அனைத்துமே உண்மையானவையாக அல்லது சரியானவையாக இருக்கும் என்று நம்ப முடியாமல் இருக்கக்கூடும். எனினும் அவை ஆய்வுத் தேவைகளுக்குப் பயன்பட முடியும்.)
 
பிரபாகரனின் தியாகச்சாவு 2009 மே மாதம் 19 ஆம் திகதி நிகழ்ந்திருப்பதை, நம்பகமான ஆதாரங்களும் எனது சுயாதீன ஆய்வின் பெறுபேறுகளும் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. இது பற்றி அவ்வப்போது எழுதியும் பேசியும் வந்திருக்கிறேன். வருங்காலத்தில் அவசியப்படுமாயின், ‘புலனாய்வு ஊடகவியல்’ சார்ந்து விரிவான ஆய்வுக் கட்டுரை ஒன்றை நான் எழுதக்கூடும்.
 
பிரபாகரனின் தியாகச்சாவு 2009 மே 18 ஆம் திகதி நிகழ்ந்திருப்பதாக ஒரு தரப்பினரும், அதற்கு முன்னர் 17 ஆம் திகதி நிகழ்ந்திருப்பதாக இன்னொரு தரப்பினரும் கருதுவது சரியல்ல. அது எப்போது நிகழ்ந்தது என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. அது எப்படி நிகழ்ந்தது என்பதை உறுதிப்படுத்தக்கூடிய நம்பகமான ஆதாரங்கள் இன்னமும் கிடைக்கவில்லை. வாக்குமூலங்களாகப் பெறப்பட்ட சில மாறுபட்ட தகவல்கள் நம்பக் கடினமானவை. எது எப்படியிருந்தாலும், நிகழ்தகவுகளின் அடிப்படையில் மட்டுமே இப்போதைக்கு அதைத் தீர்மானிக்க முடியும்.
 
இத்தகைய விடயங்களை அல்லது உண்மைகளைப் பதிவுசெய்து சர்ச்சைகளையோ முரண்பாடுகளையோ தோற்றுவிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. வரலாற்று உண்மைகளைத் திரிபுபடுத்தக்கூடிய, காணாமல் ஆக்கிவிடக்கூடிய செயல்களில் அறிந்தோ அறியாமலோ எவரும் ஈடுபடக் கூடாது.
 
விமர்சனங்களுக்கு அப்பால், விடுதலையின் பெயரால் இறுதி வரை பிடிவாதமாகப் போராடித் தியாகச்சாவைத் தேர்ந்துகொண்டவர் பிரபாகரன். அவருக்கான அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானது. அவரை அதீதமாக மகிமைப்படுத்தும் அல்லது துதிபாடும் வகையிலான செயற்பாடுகள், அவருக்கோ தமிழ்ச் சமூகத்திற்கோ அவசியமற்றவை. அவரது போராட்டப் பங்களிப்புகளும் தலைமைத்துவத் தவறுகளும் விடுதலை அரசியல் சார்ந்து பேசப்பட வேண்டியவை. அர்ப்பணிப்புகளும் நெருக்கடிகளும் அறியப்படாத ரகசியங்களும் சர்ச்சைகளும் நிறைந்த அவரது போராட்ட வாழ்விலும், அவர் தேர்ந்துகொண்ட தியாகச்சாவிலும் இருந்து படிப்பினைகள் பெறப்பட முடியும்.
 
பிரபாகரனுக்கான ‘திரள் நிலை’ அஞ்சலி நிகழ்வுகள், மே மதத்தின் 19 ஆம் திகதியில் நிகழ்த்தப்படுவதே பொருத்தமானது. அவருக்கான அஞ்சலி நிகழ்வுகள், மே மாதத்தின் 17 ஆம் திகதியிலோ 18 ஆம் திகதியிலோ நிகழ்த்தப்படுவது பொருத்தமாகாது. எது எப்படியிருந்தாலும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து தியாகச்சாவடைந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முன்னெடுக்கப்படுகிற நவம்பர் 27 ‘மாவீரர் நாள்’ நிகழ்வுகளில் அவரையும் அஞ்சலிக்குரியவராக இணைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. தியாகச்சாவடைந்தோருக்கான அஞ்சலி நிகழ்வுகள், வெற்றுச் சடங்குகளாக அல்லாமல் விடுதலை அரசியல் சார் செயற்பாடுகளின் பகுதிகளாக அமைய வேண்டும் என்று விடுதலைச் சிந்தனையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
 
  
பிரபாகரனின் தியாகச்சாவு மற்றும் அவருக்கான அஞ்சலி நிகழ்வுகள் தொடர்பாக 2024 இல் நான் எழுதிய கட்டுரையின் சில பகுதிகள், வரலாற்றுத் தேவை கருதி இக் கட்டுரையுடன் இணைக்கப்பட்டுள்ளன.  
 
//தியாகச்சாவடைந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் திரு. பிரபாகரனுக்கும் அவரது குடும்பத்தினருக்குமான அஞ்சலி நிகழ்வு, டென்மார்க் நாட்டில் நடைபெற்றிருக்கிறது. (2024-05-18) அவரது அண்ணன் மனோகரன் அவர்களது குடும்பத்தினர், அந்த நிகழ்வை முன் நின்று நடாத்தியிருக்கிறார்கள். 
 
விடுதலைப் புலிகள் இயக்கம் சார்பான அடையாளங்களையும் பெயர்களையும் கோசங்களையும் பயன்டுத்திக்கொண்டு நிறுவனமயமாகி இயங்க முற்படுவோர் எவராலும், கடந்த 15 வருடங்களில் இத்தகைய திரள் நிலை அஞ்சலி நிகழ்வு ஒழுங்கமைக்கப்படவில்லை. (சிலர், தனிப்பட்ட முறையில் அஞ்சலி செலுத்திவந்திருக்கிறார்கள் என்பது வேறு விடயம்.) பிரபாகரனும் அவரது மனைவியும் மகள் துவாரகா அவர்களும் உயிரோடு இருக்கிறார்கள் என்று பொய் சொல்லி ‘ஊழல் அரசியல்’ செய்யச் சிலர் முற்படுகிற நிலையில், டென்மார்க் நாட்டில் நடைபெற்றிருக்கும் அஞ்சலி நிகழ்வு முக்கியத்துவம் கொண்டதாகப் பார்க்கப்படுகிறது.//
 
//பிரபாகரனின் ‘தியாகச்சாவு’ நிகழ்ந்துவிட்டதை, என்னளவில் நான் உறுதிப்படுத்திப் பல வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால், அது எப்போது எப்படி நிகழ்ந்தது என்பதை யாராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாதிருந்தது.
 
ஏற்கெனவே நான் பார்த்திருக்கக்கூடிய அரிதான சில ஒளிப்படங்கள், பல்வேறு தரப்பினர் மூலம் அறியக்கிடைத்த முரண்பட்ட தகவல்கள், நிகழ்தகவுகளின் அடிப்படையிலான சொந்த ஆய்வு முடிவுகள், பிரபாகரன் தொடர்பான சொந்த அனுபவங்கள் போன்றவற்றின் அடிப்படைகளில் இருந்து பார்க்கும்போது, 2009 மே 18 இல் அல்லது மே 17 இல் பிரபாகரனின் சாவு நிகழ்ந்திருக்கச் சாத்தியமில்லை என்று தோன்றுகிறது.
 
பல்வேறு நோக்குநிலைகளின் முடிவாக, பிரபாகரனின் சாவு 2009 மே 19 அன்று காலை நிகழ்ந்திருப்பதாகத் தெரியவருகிறது. அன்றைய நாளில், அவரது உடல் சார்ந்த காட்சிப் பதிவுகள் பொதுவெளியிற் பகிரப்பட்டன. அநாகரிகமான முறையிலே சிறீலங்கா அரச தரப்பினராற் கையாளப்பட்ட அவரது உடல், அவசரகதியில் அழிக்கப்பட்டுவிட்டது.//
 
//உண்மையில், 2009 மே 18 இல் இறுதிப் போர் சார்ந்த அனைத்துமே முடிந்திருக்கவில்லை. உண்மைகளை மூடிமறைத்துப் போர்க்குற்றங்களை நிகழ்த்திக்கொண்டே 2009 மே 18 அன்று போரை வெற்றிகரமாக முடித்துவிட்டதாக இலங்கை அரசு அவசரகதியில் அறிவித்தது. 2009 மே 18 இன் பின்னரான சில நாட்களிலும், போர்க்குற்றங்களும் படுகொலைகளும் பல்வேறு அசம்பாவிதங்களும் நடந்திருக்கின்றன.
 
சிறீலங்கா அரச தரப்பினரது ‘வெற்றிக் கொண்டாட்ட’ நாளாக, 2009 மே 18 ஆக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மே 18 தமிழின அழிப்பு நினைவெழுச்சி நாளாக ஈழத்தமிழர்கள் மத்தியில் நிலைபெற்றுவிட்டது. இந்த வகையில், மே 18 தமிழின அழிப்பு நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் பெறக்கூடியவை.//
 
//மே 18 ஆம் நாள், தமிழின அழிப்பு நினைவு நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த நாளிலேயே பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான அஞ்சலி நிகழ்வைத் தனியாகத் தொடர்ந்து நடாத்துவது பொருத்தமானதா என்னும் கேள்வியைப் பொதுவெளியில் முன்வைக்க வேண்டியிருக்கிறது. 
 
காலப்போக்கிலே அஞ்சலி நிகழ்வு விரிவாக்கம் பெறும்போது, தமிழின அழிப்பு நினைவு நாள் நிகழ்வுகளின் கவனக்குவிப்பு மற்றும் வினைத்திறன் குறைவடையக்கூடும்.//
 
//முடிவாக, எல்லா வகையிலும் ஆராய்ந்து ஒரு நிலைப்பாட்டுக்கு வரலாம். தமிழின அழிப்பு நினைவெழுச்சி நாளாக நிலைபெறுகிற மே 18 இல், பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் எல்லோரையும் உள்ளடக்கிய அஞ்சலி நிகழ்வுகளை முன்னெடுப்பது ஆரோக்கியமானதல்ல. மே 19 இல் அத்தகைய அஞ்சலி நிகழ்வுகளை முன்னெடுப்பது பொருத்தமாக இருக்கும். பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் (13 வயது), கைதியாக்கப்பட்டிருந்து 2009 மே மாதம் 19 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பிரபாகரனுக்கும் போராளியாக இருந்து தியாகச் சாவடைந்த அவரது மகள் துவாரகா வுக்கும், வருடாந்தம் நவம்பர் 27 இல் முன்னெடுக்கப்படுகிற ‘மாவீரர் நாள்’ நிகழ்வுகளில் இனியாவது அஞ்சலி செலுத்தப்படுமா?//
 
அமரதாஸ்
2025-03-11